அன்று வேக்சின்போட ஆளில்லை.. இன்று தடுப்பூசிகளே இல்லாத நிலை..சில மாதங்கள் தலைகீழ் மாற்றம்-என்ன காரணம்
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் வேக்சின் போட்டுக்கொள்ளவே பொதுமக்கள் அஞ்சி ஓடிய நிலை மாறி, இப்போது அனைத்து மையங்களிலும் வேகிசன் போட்டுக் கொள்ள அதிகாலை முதலே காத்துக்கிடக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா 2ஆம் அலை நாட்டில் இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் 3-வது நாளாக பெய்த கனமழை.. இந்த 5 மாவட்டங்களில் பலத்த மழை கொட்ட போகுது!
இருப்பினும், பற்றாக்குறை காரணமாக வேக்சின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் பற்றாக்குறை காரணமாகக் கடந்த இரண்டு நாட்களாக வேக்சன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வேக்சின் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்து முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தடுப்பூசி போடத் தகுதியான மக்கள்தொகையில் ஆயிரத்திற்கு 302 வேக்சின் மட்டுமே வழங்கப்படுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் குஜராத் (533), கர்நாடகா (493), ராஜஸ்தான் (446) ஆகிய மாநிலங்களில் தடுப்பூசிகள் அதிகம் ஒதுக்கப்படுவதையும் அவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூடுதலாக வேக்சின்
கடந்த ஜூலை 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 1.8 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல மாநிலத்தில் 1,98,74,408 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குப்பியும் முறையாகப் பயன்படுத்தினால் சிலருக்குக் கூடுதலாகவும் வேக்சின் செலுத்த முடியும். இதன் மூலம் கூடுதலாக ஏழு லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வேக்சின் பற்றாக்குறை
ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு ஒட்டுமொத்தமாக 71 லட்சம் டோஸ் மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேக்சின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகள் தொடங்கிய போது பல இடங்களும் வேக்சின் மையங்களில் காற்று வாங்கிக் கொண்டே இருந்தது. வேக்சின் குறித்து மக்களிடையே அச்சம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.
வாக்குவாதம்
தமிழ்நாட்டின் பல இடங்களிலும் அதிகாலை முதலே வேக்சின் போட வரிசையில் நிற்கின்றனர். ஆனால், வேக்சின் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல இடங்களில் பொதுமக்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் இதில் வாக்குவாதங்கள் கூட நடக்கிறது. இதனால் 2ஆம் டோஸ் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டியவர்களும்கூட சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்
தடுப்பூசி வீணடிப்பு காரணமாகவே பற்றக்குறை இருப்பதாக பாஜகவின் குஷ்பு தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கமளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், "தடுப்பூசி வீணடிப்பது குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன் வைக்கிறார். முந்தைய அதிமுக அரசு தான் 3 லட்சம் வேக்சின்களை வீணடித்திருந்தது. இது அப்போது இருந்து தடுப்பூசிகளில் 6% ஆகும்" என விமர்சித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி," தடுப்பூசி பணிகள் தொடங்கப்பட்ட போது மக்களிடையே அச்சம் அதிகமாக இருந்தது. அப்போது 10 பேருக்கு அளிக்க வேண்டிய வேக்சின் குப்பியின் மூலம் வெறும் 5 அல்லது 6 பேருக்கு மட்டுமே வேக்சின் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி அதிகம் வீணானது" என்று அவர் தெரிவித்தார்.
12 கோடி டோஸ் தேவை
மாநிலத்தில் ஒரு காலத்தில் வேக்சின் போடவே மக்கள் அஞ்சிய நிலை மாறியுள்ளது இது நல்ல ஒரு செய்தி. ஆனால், வேக்சின் தட்டுப்பாடு இப்போது புதிய பிரச்சினையாக எழுந்துள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த இரண்டு டோஸ் தடுப்பூசி என்பது முக்கியம் என்பது ஆய்வாளர்கள் பரிந்துரை. இந்நிலையில், மாநிலத்திற்கு இன்னும் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவை என்றும் பற்றக்குறை இல்லாமல் இருந்தால் 5 முதல் 6 மாதங்களில் மாநிலத்தில் அனைவருக்கும் வேக்சின் போட முடியும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.