தலைசிறந்த நாடாளுமன்றவாதி ஜஸ்வந்த் சிங்... வைகோ புகழஞ்சலி
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான மறைந்த ஜஸ்வந்த்சிங் தலைசிறந்த நாடாளுமன்றவாதி என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள இரங்கல்:

முன்னாள் மத்திய அமைச்சரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான ஜஸ்வந்த் சிங் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்கள் அவையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். ஆணித்தரமான ஆதாரங்களோடு வாதங்களை எடுத்து வைப்பார். நான் அவரோடு மிகச் சிறந்த நட்பு கொண்டிருந்தேன்.
அவர் இந்தியக் கடற்படையில் சிறப்பாகப் பணியாற்றியவர். குளியல் அறையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு, கடந்த சில ஆண்டுகளாகவே சுயநினைவு இன்றி இல்லத்தில் இருந்தவாரே சிகிச்சைப் பெற்று வந்தார்.
நான் டில்லி செல்லும்போதெல்லாம் அவரது வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து வந்தேன். அவருடைய மறைவு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், இந்தியப் பொதுவாழ்வுக்கும் இழப்பாகும்.
அவரது மறைவால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications