பாஜகவின் ஊதுகுழல் ஆளுநர்.. மோடி ஏமாற்றப் பார்க்கிறார்.. அவரும் தோற்று ஓடுவார்.. வைகோ ஆவேசம்!
சென்னை : ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார், பாஜகவின் கைப்பாவையாகவும், ஊதுகுழலாகவும் தான் செயல்படுகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
பிரபாகரனின் 68வது பிறந்த நாலையொட்டி அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், மோடி காசி தமிழ்ச் சங்கமம் என்கிற பெயரில் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். மக்கள் ஏமாற மாட்டார்கள். இப்படி எத்தனையோ பேர் முயற்சி செய்து தோற்றுப் போயுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
காசி - தமிழ்நாடு பிணைப்பு இன்று நேற்று வந்ததல்ல.. அப்டேட் செய்திருக்கிறார் மோடி.. தமிழிசை பேச்சு!
வஞ்சகம்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் பிரபாகரன் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது உருவப்படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜபக்சே கூட்டம் இனப் படுகொலை செய்துவிட்டு ஜெனீவா மனித உரிமைகள் மன்றத்தில் இனப் படுகொலை நடக்கவில்லை என்று தெரிவித்து வருகிறது. தமிழீழ விவகாரத்தில் இந்தியா வஞ்சகம் செய்தது துரோகம் செய்தது. தமிழீழம் தான் தீர்வு எனத் தெரிவித்தார்.
அப்பட்டமான பொய்
தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்ட நாளான இன்று ஆளுநரின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், "அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவர் பாஜகவின் கைப்பாவையாக, ஊதுகுழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டம் அரங்கேறிய இந்த தினத்தில், அவர் பேசுவதெல்லாம் பொய், சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். அவர் தமிழ்நாட்டிற்கு விரோதமாகச் செயல்படுகிறார்" எனத் தெரிவித்தார்.
மோடி ஏமாற்ற நினைக்கிறார்
மத்திய அரசின் காசி தமிழ்ச் சங்கமம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, "காசி தமிழ் சங்கமம் என்கிற பெயரில் பிரதமர் மோடி ஏமாற்றலாம் என்று நினைக்கிறார். தமிழை சொல்லி, திருக்குறளை சொல்லி, பாரதியாரை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். அதெல்லாம் ஒன்றும் நடக்காது. இப்படி எத்தனையோ பேர் முயற்சி செய்து தோற்றுப் போயுள்ளனர்" என்று தெரிவித்தார்.
பாஜக அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறது
வரும் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறப்படுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வைகோ, "பாஜக ரொம்ப நாளாக அப்படித்தான் நினைக்கிறது. கடந்த தேர்தலிலும் இப்படித்தான் சொன்னார்கள். அதெல்லாம் நடக்காது. இதே திமுக தலைமையிலான அரசுதான் நீடிக்கும், திமுக தலைமையிலான அணிதான் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
பச்சைத் துரோகம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, "அது பச்சைத்துரோகம். 32 ஆண்டுகள் எந்த குற்றமும் செய்யாமல், சிறையிலேயே வாடிய அவர்களது விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது, மத்திய அரசுக்கு மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாததையே காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.