“அண்ணன் வைகோ”.. ரியல் ஹீரோ.. தியாகத்தால் உருவான லட்சிய ஹீரோ.. பாராட்டித் தள்ளிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : சத்யம் திரையரங்கில் பல சினிமாக்கள் திரையிடப்பட்டுள்ளன. அதில் பல ஹீரோக்களைப் பார்த்துள்ளோம். திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டவர்கள். அண்ணன் வைகோ சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
வைகோ ரியல் ஹீரோ, தியாகத்தால் உருவான ஹீரோ. அண்ணன் வைகோவின் அரசியல் பயணம் பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் பயணம் குறித்த 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
வீல் சேரில் சென்று உணவு டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி பெண்.. பரவும் வீடியோ.. குவியும் பாராட்டு!
மாமனிதன் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீண்ட நெடிய அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. மாமனிதன் வைகோ ஆவணப்படத்தை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராயப்பேட்டை சத்யம் தியேட்டரில் நடந்த விழாவில் வெளியிட்டார்.
அனைத்துக் கட்சித் தலைவர்கள்
இந்த விழாவில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், முஸ்லீம் லீக் காதர் மொய்தீன், தவாக வேல்முருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்டாலின் பேச்சு
'மாமனிதன் வைகோ' ஆவணப்படத்தை வெளியிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "சத்யம் திரையரங்கில் பல சினிமாக்கள் திரையிடப்பட்டுள்ளன. அதில் பல ஹீரோக்களைப் பார்த்துள்ளோம். திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டவை. வைகோ சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ.
வைகோ ரியல் ஹீரோ மட்டுமல்ல, கொள்கை ஹீரோ, லட்சிய ஹீரோ, தியாகத்தால் உருவான ஹீரோ. எழுச்சிமிக்க, உணர்ச்சிமிக்க, போராளி ஹீரோ வைகோ. உயரத்தில் மட்டுமல்ல, லட்சியம், தியாகத்தில் உயர்ந்தவர் வைகோ.
வைகோவிடம் தேதி கேட்டு கூட்டம் நடத்தினேன்
திமுக மாணவரணியில் இருந்தபோது வைகோவிடம் தேதி கேட்டு கூட்டம் நடத்தியவன் நான். திமுகவின் மாநாடுகளில் வைகோவின் பேச்சுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். 56 வருட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர் வைகோ. நெருக்கடி காலத்தில் சிறைகளில் இருந்த அனைவருக்கும் வைகோ கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்.
படிக்காமலேயே கையெழுத்து போட்டார்
பொடாவில் கைதாகி சிறையில் இருந்த வைகோ, குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார். கருணாநிதி சொல்லியனுப்பினார் என்ற போது, படித்து பார்க்காமயிலேயே, தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் வைகோ. பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடுகளில் உணவு நேரத்தில் தான் பேசுவார் வைகோ. அப்போது தான் கூட்டம் கலையாது.
வைகோ ஓர் எடுத்துக்காட்டு
வைகோவின் அரசியல் வாழ்வைப் பேச நேரமில்லை, பேசினால் பேசிக்கொண்டே போகலாம். வைகோவின் அரசியல் பயணம் பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டு. எழுச்சி, உணர்ச்சியுடன் நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடமாக வைகோவின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கித்தந்துள்ள துரை வைகோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்." எனத் தெரிவித்தார்.
திராவிடப் போர்வாள்
மேலும், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "உரை வீச்சால் அரசியலின் ஆழத்தையும் - நெடும்பயணங்களால் தமிழ்நாட்டையும் அளந்தவர்! 'திராவிடப் போர்வாள்' எனச் செருக்களத்தில் கொள்கைப் பகைவர் கூட்டத்தை எதிர்ப்பவர்! அண்ணன் வைகோ அவர்களது வாழ்க்கைப் பயணத்தைத் திரையில் கண்டு மகிழ்ந்தேன். வாழ்க அவரது தொண்டு! வெல்க திராவிடம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.