வைகோ கணித்த ஸ்விங்.. விஜய்க்கு சப்போர்ட்டா? தவெக பக்கம் சாயும் தமிழக வாக்கு! மதிமுக கணக்கு பலிக்குமா?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், வைகோ வெளியிட்டுள்ள அதிரடி கணிப்பு ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜய் குறித்து முன்வைத்த தகவல்கள் முன்னணி கட்சிகளை அதிர வைத்துள்ளது.. கருத்துக்கணிப்புகளை தாண்டி களத்தில் நடக்கப்போகும் அந்த SWING அதாவது வாக்கு மாற்றம் என்ன என்பதை வைகோ வெளிப்படையாக உடைத்துள்ளார்..
மதிமுகவுக்குள் ஏற்கனவே பல சலசலப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. அக்கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் லோ. சோமசுந்தரம் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் கோபால் உள்ளிட்ட 75 நிர்வாகிகள், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகத் தொடர்ந்தாலும் தங்களது பொறுப்புகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.

மதிமுக வைகோ
மொடக்குறிச்சி தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தபோது, "பதவி என்பது கட்சி போடும் பிச்சை" என்று சொன்னாராம்.. இந்த வார்த்தைகள் தங்களின் சுயமரியாதையைப் பாதித்ததே இந்த முடிவுக்குக் காரணம் என்று அதிருப்தியாளர்கள் சொல்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் குழப்பம் விளைவிக்கக் கூடாது என்பதற்காக வேட்பாளரின் வெற்றிக்காக உழைத்து முடித்த பிறகு, இப்போது இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாகவும், சுயமரியாதை போற்றும் கட்சியில் நிர்வாகிகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் ஆதங்கம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தவெக - ஆட்சிக்கு வரும்?
இந்த விவகாரத்தின் பரபரப்பே அடங்காத நிலையில், வைகோ வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளன.. குறிப்பாக, தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜய் குறித்து சில முக்கியமான தகவல்களை முன்வைத்துள்ளார்..
பொதுவாக தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக வெளியாகும் கருத்துக்கணிப்புகள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவது வழக்கம்.. ஆனால், இந்த முறை வெளியாகியுள்ள பல்வேறு கருத்துக்கணிப்புகள் ஒருமித்த முடிவைத் தராமல், ஒவ்வொன்றும் முரண்பட்டு நிற்பதையே வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்..
எக்ஸிட் போல் முடிவுகள்
வைகோ தனது பேட்டியில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் ஒரே மாதிரி வரவில்லை.. 4 முடிவுகள் திமுக ஆட்சி அமைக்கும் எனவும், 1 முடிவு அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும், மற்றொன்று தவெக ஆட்சிக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.. இன்னும் பல கருத்துக்கணிப்புகள் உள்ளன.
ஆனால், ஒவ்வொன்றில் இருந்து மற்றொன்று மாறுபடுகிறது.. நாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.. விஜய் தலைமையிலான தவெக வலிமையான சக்தியாக திகழ்வதுடன், தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தக்கூடும்.. மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது.. தவெகவுக்கு சாதகமான வாக்கு மாற்றம் நடக்கலாம்.."என்று வைகோ பேசியுள்ளார்.
விஜய் வாக்கு வங்கி
இதை பற்றின கேள்வியும், குழப்பமும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.. வைகோ ஏன் இப்படிப் பேசியிருக்கிறார்? இதனை ஒரு மாற்று அரசியல் கட்சியைப் பாராட்டும் மூத்த தலைவரின் பண்பாக மட்டும் பார்க்காமல், கள எதார்த்தத்தை அவர் வெளிப்படுத்தியதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட வைகோ, இந்தத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கியுள்ள விஜய் தலைமையிலான தவெக குறித்து கூறியுள்ள தகவல்கள் மிக முக்கியமானவை.. ஒரு புதிய சக்தியை எதிர்பார்க்கும் இளைஞர்களின் ஆதரவு விஜய்க்கு இருப்பதை வைகோ தனது பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார்..
வைகோ ஏன் அப்படி பேசினார்
அதே சமயம், இது ஒரு அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடாகவும் அமைகிறது.. தனக்கு நேரெதிர் கொள்கை கொண்டவர் அல்லது அரசியலுக்குப் புதியவர் என்று பாராமல், ஒரு கட்சியின் வளர்ச்சியை மூத்த தலைவர் என்ற முறையில் அவர் பதிவு செய்துள்ளார்.
ஏனென்றால் பல நேரங்களில் மூத்த தலைவர்கள் புதியவர்களின் வருகையை கவனிக்க தவறுவார்கள்.. ஆனால் வைகோ, தவெக ஒரு வலிமையான சக்தியாக இருப்பதாகக் கூறுவதன் மூலம், அந்தப் புதிய வரவை தமிழக அரசியலில் கவனிக்க வேண்டிய ஒரு புள்ளியாக முன்வைத்துள்ளார்.. இது மற்ற அரசியல் சக்திகளுக்கு ஒரு செய்தியாகவும் அமைகிறது..
நாளை மறுநாள் முடிவுகள் எப்படி இருந்தாலும், வைகோ போன்ற ஒரு மூத்த தலைவர் விஜய்யின் அரசியல் வருகையையும், அவரது கட்சியின் செயல்பாட்டையும் ஒரு பேட்டியில் அங்கீகரிப்பது என்பது கவனிக்கத்தக்கது.
வைகோ கணிக்கு பலிக்குமா?
வைகோவின் கணிப்பு உண்மையானால், தமிழகத்தின் தேர்தல் முடிவுகளில் அது எதிரொலிக்கும்.. பல ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் மட்டுமே பிரதானமாக இருந்த களத்தில், ஒரு புதிய கட்சியின் தாக்கம் என்பது கள மாற்றத்தையே குறிக்கிறது.
அதுமட்டுமல்ல, வைகோவின் இந்த பேட்டியின் மூலம், தவெக தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தியாக இருப்பதை உணர முடிகிறது.. முடிவுகள் வெளியாகும் நாளில், தமிழக அரசியலின் நிலவரம் என்ன என்பது முழுமையாக நமக்கு தெரியவரும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications