பிடர் கொண்ட சிங்கமே பேசு.. 2018ல் கருணாநிதி முன் வாசித்த கவிதை வீடியோவை மீண்டும் வெளியிட்ட வைரமுத்து
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வாசித்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Recommended Video
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்தார். அவரது 4 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடம் கடல் அலை போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக மூத்த தலைவர்கள் என மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு பிரபலங்கள் கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றுவதில் கருணாநிதி பங்களிப்பு இணையற்றது: பினராயி விஜயன் புகழாரம்
கருணாநிதி முன்பு கவிதை
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து கடந்த 2018ஆம் கருணாநிதியை நேரில் சந்தித்து அவர் முன் தான் கவிதை வாசித்த வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். வைரமுத்து கவிதையை வாசிக்க அதை கருணாநிதி ரசித்த படியே கேட்ட வீடியோவை கண்டு பலரும் நெகிழ்கிறார்கள்.
அந்த கவிதையில் இருப்பது:
பிடர் கொண்ட சிங்கமே பேசு
இடர்கொண்ட தமிழ்நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து
யாதொன்றும் கேட்கமாட்டேன்
யாழிசை கேட்கமாட்டேன்
வேதங்கள் கேட்கமாட்டேன்
வேய்க்குழல் கேட்கமாட்டேன்
தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே
நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து... என அந்த கவிதை உள்ளது.
கருணாநிதி நினைவிடம்
கருணாநிதியின் நினைவிடத்தில் அவருக்கு பிடித்த பொருளான பேனாவுக்கு சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்கள். கருணாநிதியின் பேனாவுக்கு மக்களிந் வரிப் பணத்தில் சிலை வைப்பதா என்ற கேள்வி எழுகிறது.
பேனா சிலை
அது போல் கடற்கரையில் அத்தகைய உயரத்தில் பேனாவுக்கு சிலை வைப்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைத் தெரிவிக்கிறார்கள். இது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. படேலுக்கு சிலை வைத்தது குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.