ஓவரா ரேட் போடுறாங்க.. தமிழ்நாடு அரசு முடிவை விமர்சிக்கும் வானதி சீனிவாசன்.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: கோயம்புத்தூர் சாலைகளில் வாகனம் நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் சாலையோரப் பகுதிகளில் வாகன நிறுத்தம் அமைக்க, அங்கு 30 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
அதில் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் 40 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.அதேபோல், பிரத்யேகமாக வாகன நிறுத்தத்துக்கு நான்கு சக்கர வாகனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு இருபது ரூபாயும் இரு சக்கர வாகனத்துக்கு ஐந்து ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மால்களில் பார்க்கிங் கட்டணம் எதுக்கு.. அது உங்க கடமை... குட்டு வைத்த கேரள உயர்நீதிமன்றம்
வானதி சீனிவாசன்
இந்நிலையில், இந்த வாகன நிறுத்தக்கட்டணம் அதிகமாக இருப்பதாக சொல்லி, கோயம்புத்தூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய சமூக வளைதளங்களில் அவர் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், '' கோவை மாநகரில் பொதுமக்கள் கார்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ. 30, ரூ. 40, இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதாவது திமுக அரசு அறிவித்துள்ளது.
கட்டணம் அதிகம்
ஒப்பணக்கார வீதி ,ரங்கே கவுடர் வீதி ,இடையர் வீதி, வெறைட்டி ஹால் சாலை , ராஜவீதி , பேரூர் பிரதான வீதி, ஆர்.எஸ்.புரம் டிவி சாமி சாலை கிழக்கு ,ஆர்.எஸ்.புரம் டிவி சாமி சாலை மேற்கு , ஆர்.எஸ்.புரம் டிபி சாலை, பாரதி பார்க் சாலை, அழகேசன் சாலை, என்.எஸ்.ஆர். சாலை, டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலை, பவுர்ஹவுஸ் சாலை ,பவர்ஹவுஸ் சாலை மேற்கு , பவர் ஹவுஸ் சாலை கிழக்கு , கிராஸ்கட் சாலை ,சக்தி சாலை , டாக்டர் நஞ்சப்பா சாலை, சத்தியமூத்தி சாலை, பழைய அஞ்சல் ஆபிஸ் சாலை, ஸடேட் பேங்க் சாலை, அவினாசி சாலை, அரசினர் கலைக்கல்லூரி சாலை, பந்தயசாலை சாலை, காமராஜ் சாலை என்று கோவை மாநகரில் 30 சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கார்கள் நிறுத்த கட்டணம்
அங்கு கார்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ. 30, சில பகுதிகளில் ரூ. 40, இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 என்று மிக அதிக அளவில் கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறு, சிறு தொழில்கள் நிறைந்த கோவை மாநகரில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் மிக மிக அதிக அளவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள். அதிக கட்டணத்தால் வாகனங்களை குடியிருப்பு பகுதியில் நிறுத்தி விடுவார்கள். இதனால் வேறு சில பிரச்சினைகள் எழக்கூடும். வியாபாரமும் பாதிக்கப்படும்.
கோவை கட்டண உயர்வு
கோவை மாநகர பகுதியில் காலியாக உள்ள வணிக வளாகங்கள், காலி இடங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலித்து மக்களைக் கசக்கிப் பிழிவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. நடுத்தர ஏழை எளிய மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்க முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்'' என்று வானதி சீனிவாசன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.