சிறந்த மேலாண்மைக்கான விருது... அசத்திய வண்டலூர் பூங்கா.. புது அங்கீகாரத்துடன் பொலிவு பெறுகிறது
சென்னை: சிறந்த மேலாண்மை மற்றும் பராமரிப்பு எனும் அடிப்படையில் வண்டலூர் உயிரியல் பூங்கா சிறந்த பூங்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் தற்போது புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' அமைந்துள்ள நிலையில், சிறந்த பூங்கா எனும் அங்கீகாரத்தை பெற்றிருப்பது பூங்காவுக்கு புதுப்பொலிவை அளித்துள்ளது.
களைகட்டும் செஸ் ஒலிம்பியாட் கொண்டாட்டங்கள்.. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இன்று விடுமுறை!
வரலாற்று பின்னணி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 180 வகைகளை சேர்ந்த 2,500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு என தனி வரலாறு உள்ளது. இந்த வரலாறே பூங்காவின் தனிச்சிறப்பு என்று கூறலாம். இந்த பூங்கா 1854ல் ஒரு சிறுத்தை மற்றும் புலியுடன் தொடங்கப்பட்டது. இந்த பூங்கா முதலில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புறநகர் ரயில் நிலையத்திற்கு பின்னால் அமைந்திருந்தது. ஆனால் இப்பகுதியில் ஏற்பட்ட ஒலி மாசு காரணமாக 1975ல் இது வண்டலூருக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த பூங்காவின் உண்மையான வயது 168.
சிறந்த பூங்கா
இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவில் வண்டலூர் பூங்காவும் ஒன்று. இந்நிலையில் இந்த வரலாற்று சிறப்பம்சத்தோடு தற்போது 'சிறந்த பூங்கா' என்கிற பெயரையும் வென்றுள்ளது இந்த பூங்கா. புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலாண்மை மற்றும் பராமரிப்பு எனும் அடிப்படையில் 82 புள்ளிகளை பெற்று சிறந்த பூங்காவாக தேர்வாகியுள்ளது 'வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா'.
'நீர்வாழ் உயிரின காட்சி சாலை'
ஏற்கெனவே இந்த பூங்காவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இங்குள்ள விலங்குகளை நேரலையில் மக்கள் கண்டுகளிக்கும் வசதியும் உள்ளது. இந்நிலையில் பூங்காவில் தற்போது புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பூங்காவின் சொந்த வருவாய் நிதியிலிருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த பணிகள் நிறைவுற்று தற்போது 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
புதுப்பொலிவு
இதில், 28 வகையான அலங்கார மீன்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே பல அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களை கொண்டுள்ள இந்த பூங்கா இப்போது புதிய அங்கிகாரத்துடனும், நீர்வாழ் உயிரின காட்சி சாலையுடன் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்த பூங்காவுக்கு வார நாட்களில் சுமார் 4,000க்கும் அதிகமானவர்களும், விடுமுறை நாட்களில் 10,000க்கும் அதிகமானவர்களும் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.