வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து: தமிழக அரசின் உயர்கல்வித்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
10.5 வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பாக தமிழக அரசு அப்பீல் செய்துள்ளது
சென்னை: வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் மேலும் 3 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு விவகாரம் மிகப்பெரிய அதிர்வலையை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்து அந்த சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 1-ந் தேதி ரத்து செய்து தீர்ப்பு கூறியது.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து.. வன்னிய மக்களுக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் பேரிடி.. ஜிகே மணி பேச்சு
பாமக
இது பாமக தரப்பினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. நீதிமன்ற தீர்ப்பு குறித்து பல்வேறு விவாதங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்தன.. 10.5% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று ஹைகோர்ட் தீர்ப்பு வந்தவுடனேயே முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்... அதன்படியே சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது...
மனு தாக்கல்
ஆனாலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தீவிரத்தைக் காட்டும் வகையில் தமிழ்நாடு பிசி, எம்பிசி ஆணையம், தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் ஆகியோர் சார்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 10.5% இட ஒதுக்கீடு படி உயர் கல்வித் துறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக உயர் கல்வித் துறையும் தனியாக ஒரு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது.
உள்ஒதுக்கீடு
ஆக தமிழ்நாடு அரசு சார்பில் மட்டும் 4 மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தமிழக சட்டத்துறை மற்றும் உயர்கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக 3 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video
கேவியட் மனுக்கள்
ஏற்கனவே தமிழக அரசு சார்பிலும், பாமக சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் பட்சத்தில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்து இதுவரை 15 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.