பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாகவே வன்னியர் ஜாதிக்கு 10.5% உள் இடஒதுக்கீடு: ஓ.பி.எஸ்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாகவே வன்னியர் ஜாதிக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
தி இந்து நாளேடுக்கு ஓ. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பழைய ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இயலாது. இதை வன்னியர் சமூக பிரதிநிதிகளிடம் தெரிவித்திருக்கிறோம். தற்போதைய 10.5% இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானதுதான்.

தற்காலிக இடஒதுக்கீடு
ஜாதிவாரியான கணக்கெடுப்பு முடிவடைந்தபின் அனைத்து ஜாதியினருக்குமான இடஒதுக்கீடு என்பது நடைமுறைப்படுத்தப்படும். தற்போதைய தற்காலிக இடஒதுக்கீட்டை வன்னியர் ஜாதி பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆணையம் பரிந்துரைக்கும் முடிவுகளின் படி இடஒதுக்கீடு வழங்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகள் வந்தபின்னர் வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது எங்கள் கருத்தாக இருந்தது. ஆனால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் தற்காலிகமான ஏற்பாடு ஒன்றை விரும்பினர். அதனால் 10.5% இடஒதுக்கீடு என்பது அறிவிக்கப்பட்டது.

கூட்டணியில் ஒற்றுமை
கருத்து கணிப்புகள் என்பவை அதை செய்கிறவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வெளியிடப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்களை எங்களது அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நாங்கள் சட்டசபை தேர்தலில் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் பிரசாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்கிற கருத்தை ஏற்க முடியாது. நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் ஒற்றுமையாக பிரசாரம் செய்கிறோம். எங்கள் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடுகளுக்குமே இடம் இல்லை.

மக்கள் நலன்
ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு உரிமை இல்லை. மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சியில் நீடிக்கிறது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். இதில் என்ன குற்றம் இருக்கிறது? நாங்கள் மக்கள் நலனுக்காகவே கூட்டணி அமைத்திருக்கிறோம்.

சசிகலா விவகாரம்
அதிமுகவைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கத்தையும் நாங்கள் ஏற்கவில்லை. இப்போது அதிமுகவில் உள்ள கட்டமைப்பு ஜனநாயக ரீதியானது. எந்த ஒரு கட்சி தொண்டனும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் முடியும். முதல்வராகவும் முடியும் என்பதற்காக கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். சசிகலாவை பொறுத்தவரையில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். அதில் உறுதியாகவும் இருந்து வருகிறார். அவரது ஆதரவை கேட்பீர்களா? என்ற யூகமான கேள்விக்கு என்னால் பதில் தர முடியாது.

முதல்வர் வேட்பாளர் ஈ.பி.எஸ்.
யாரும் நிரந்தரமான முதல்வர் இல்லை என்று சொன்னது கட்சியின் கொள்கையின் அடிப்படையில்தான். அதிமுக பொதுக்குழு கூடி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என முடிவு செய்திருக்கிறது. அதனையே நாங்கள் ஏற்று செயல்படுகிறோம். அதிமுக பெரும்பான்மை பெற்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதில் மாற்றம் எதுவும் இல்லை. இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.












Click it and Unblock the Notifications