நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிரசார பேரணி செல்ல அதிரடி தடை.. வேறு என்ன கட்டுப்பாடுகள்?.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
பல்வேறு கட்டுப்பாடுகள்
தற்போது கொரோனா காலம் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
பேரணி செல்ல தடை
கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறியுள்ள அவர் ஜனவரி 31 வரை பிரசார ஊர்வலம் செல்லவும், சைக்கிள் பேரணி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதாவது பிரசார மேலும், 300 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உள் அரங்கு கூட்டத்துக்கு மட்டுமே அனுமதி என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறிய அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணபட்டுவாடாவை தடுக்க வருவாய்துறையினர், போலீஸ் அடங்கிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். பணபட்டுவாடா தொடர்பான புகார்களை கொடுக்க தொலைபேசி எண்களும் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசு புதிய திட்டங்களை அறிவிக்கலாமா?
தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழக அரசு புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது என்றும் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்தலாம் என்று பழனிகுமார் கூறியுள்ளார்.