பாட புத்தகத்தில் ‘வர்ணம்’.. கோவணம் தான் மிச்சம்.. கொஞ்சம் என்னனு கேளுங்க ‘மலை’.. சீண்டிய ராஜீவ்!
சென்னை : சிபிஎஸ்சி பாடப் புத்தகத்தில் வர்ணாசிரம முறை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி.
இந்து மதம் பின்பற்றும் மனு தர்மத்தை ஆ.ராசா விமர்சித்துப் பேசியதற்கு பாஜகவினர் கடுமையாக கொந்தளித்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தின் பாடம் ஒன்று சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
அந்த பாடத்தைக் குறிப்பிட்டு, "உங்க தாத்தாவுக்கும் என் தாத்தாவுக்கு வெறும் கோவணம் தான் மிச்சம். ஆனால் எச்.ராஜா தாத்தாவுக்கும் சுப்பிரமணியசுவாமியின் தாத்தாவுக்கும் அங்கவஸ்திரம்,தோளில் துண்டு எல்லாம் உண்டு, கொஞ்சம் என்னனு கேளுங்க அண்ணாமலை!" எனச் சீண்டியுள்ளார் ராஜீவ் காந்தி.
6ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சாதி பேதத்தை உணர்த்தும் பாடம் இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி திமுக ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஎஸ்சி பொதுத்தேர்வு.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.. தேர்வு அட்டவணை டிசம்பர் 31-ந்தேதி வெளியீடு!
ஆ.ராசா - மனு தர்மம்
சமீபத்தில் பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, இந்து மதத்தில் இருக்கும் வர்ணாசிரமம், மனு தர்மம் பற்றித் தாக்கிப் பேசியிருந்தார். "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் தான், நீ பஞ்சமன் தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. இன்னும் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
வெகுண்டெழுந்த பாஜக
இதையடுத்து இந்து மதம் குறித்தும், இந்து பெண்கள் குறுத்தும் இழிவாகப் பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பலரும் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ஆ.ராசா தான் மனு தர்மத்தில் இருப்பதையே எடுத்துக் காட்டி இருக்கிறேன். நானாக எதுவும் சொல்லவில்லை, கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் என சவால் விடுத்து வருகிறார்.
சிபிஎஸ்சி பாடத்தில் வர்ண முறை
இந்நிலையில், மத்திய அரசின் கல்வி நிறுவனமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் "வர்ண கோட்பாடு" என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தில் சாதி பேதம் இல்லை என பாஜகவினர் கூறி வரும் நிலையில், இதை புகைப்பட ஆதாரத்துடன் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோவணம் மட்டும்
அந்தப் பாடத்தில் முதல் தட்டில் பிராமணர்களும், இரண்டாவது வரிசையில் சத்ரியர்களும், மூன்றாவது வரிசையில் வைசியர்களும், நான்காவது வரிசையில் சூத்திரர்களும் இருப்பதாக படம் இடம்பெற்றுள்ளது. மேலும், முதல் வரிசையில் இருக்கும் பிராமணர்கள் அங்கவஸ்திரம் அணிந்திருப்பது போலவும் நான்காவது வரிசையில் உள்ள சூத்திரர்கள் வெறும் கோவணம் மட்டும் அணிந்துருப்பது போலவும் படங்கள் இடம்பெற்றிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேதங்களை படிக்கக் கூடாது
மேலும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் செய்யும் பணிகளும் அந்தப் பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன. சூத்திரர்கள், மற்ற மூன்று வர்ணத்தினரும் இடும் வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும் சூத்திரர்களுக்கு வேதங்களைப் படிக்க அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு வர்ணத்தினரும் செய்யும் வேலை தொடர்பான கேள்விகளும் இந்தப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
ஐந்தாவது - துப்புரவு வேலை
மேலும், இந்த 4 வர்ணங்கள் தாண்டி, கிராமங்களின் வெளிப்பகுதியில் இருக்கும் பகுதியினர் துப்புரவு வேலை, இறந்த விலங்குகளை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவார்கள் என்றும், அவர்கள் செய்யும் தூய்மையற்ற வேலைகள் காரணமாக அவர்கள் இந்த வர்ண முறையில் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னனு கேளுங்க அண்ணாமலை
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, அண்ணாமலையைக் குறிப்பிட்டு, "அதில் பாருங்க.. உங்க தாத்தாவுக்கும் என் தாத்தாவுக்கும் வெறும் கோவணம் தான் மிச்சம், ஆனால் எச்.ராஜாவின் தாத்தாவுக்கும், சுப்பிரமணிய சுவாமியின் தாத்தாவுக்கும் அங்கவஸ்திரம், தோளில் துண்டு எல்லாம் உண்டு. கொஞ்சம் என்னன்னு கேளுங்க மலை, அண்ணாமலை..." எனப் பதிவிட்டுள்ளார்.