வாகனம் விற்போரே உஷார்...இப்படியும் நடக்கலாம்: நூதன முறையில் புல்லட்டை திருடிய பட்டதாரி இளைஞர்
சென்னை : olx இணையதளத்தின் மூலம் புல்லட் மோட்டார் சைக்கிளை விக்டர் என்பவரிடம் விலைக்கு வாங்க வந்த மர்ம ஆசாமி அதை ஓட்டி பார்ப்பது போல நடித்து புல்லட்டுடன் தப்பிச் சென்ற சம்பவம் சென்னை அமைந்தகரையில் நடந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த முகமது நிஹால் என்ற அந்த புல்லட் கொள்ளையன் துபாயில் மென்பொறியாளராக இருந்தவர், இவர்ஒ.எல்.எக்ஸ் விளம்பரத்தின் மூலம் புல்லட்டை வாங்குவது போல ஓட்டிச்சென்று திருடி, அதே புல்லட்டை ஒ.எல்.எக்ஸில் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கார் ஓட்டுனர் விக்டர் என்பவர் தனது ராயல் என்பீல்ட் புல்லட்டை விற்பதற்காக olx இணைதளத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். விளம்பரத்தைப் பார்த்து ஒருவர் விக்டரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். புல்லட்டை தான் வாங்கிக் கொள்வதாக கூறியதுடன் அமைந்தகரை கோவிந்தா தெருவில் நின்று கொண்டிருப்பதாகவும், கையோடு புல்லட்டை எடுத்து வருமாறும் அந்த நபர் போனில் கூறியிருக்கிறார்.

வாகனத்தை கொடுத்தார்
இதனால் விக்டர் தனது புல்லட் வாகனத்தை அவரிடம் கொண்டு சென்று காண்பித்திருக்கிறார்.. விலைத் தொடர்பாக இருவரும் பேசிக் கொண்டிருந்து விட்டு இறுதியில் சிறிது தூரம் ஓடிச் சென்று பார்ப்பதாக கூறியிருக்கிறார் அந்த நபரிடம் விக்டர் தனது வண்டியை கொடுத்திருக்கிறார்.

பறிகொடுத்த விக்டர்
ஆனால் அந்த நபரோ ஓட்டி பார்ப்பதுபோல் புல்லட்டை எடுத்து சென்றுவிட்டு திரும்பி வரவேயில்லை. அந்த நபர் தன்னை ஏமாற்றியதை தாமதமாக உணர்ந்த விக்டர் அமைந்தகரை போலீசில் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அமைந்தகரை போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் புல்லட்டை வாங்குவது போல் வந்து திருடிச் சென்ற நபர் யார் என்பதை கண்டுபிடித்தனர்.

சிக்கிய முகமது நிஹால்
அத்துடன் அந்த நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து அந்த சிக்னல் எங்கு உள்ளது என்பதை தேடும் பணியில் அமைந்தகரை போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். கடைசியில் முகப்பேர் பகுதியில் புல்லட் திருடனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட கொள்ளையன் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த முகமது நிஹால் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஒ.எல்.எக்ஸில் விற்பனை
முகமது நிஹாலுக்கு இப்படி ஏமாற்றி பைக்குகளை திருடி விற்பது கைவந்த கலை என்பது போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவில் இதே போன்று ஒ.எல்.எக்ஸ் விளம்பரத்தின் மூலம் புல்லட்டை வாங்குவது போல ஓட்டிச்சென்று திருடி, அதே புல்லட்டை ஒ.எல்.எக்ஸில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீசார் அறிவுறுத்தல்
எம்.சி.ஏ படித்துள்ள முகமது நிஹால் துபாயில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். பின்னர் சென்னை வந்த அவருக்கு வேலை கிடைக்காததால் திருட்டு வேலையை கையில் எடுத்திருக்கிறார். சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் காரணமாக சிக்கியிருக்கிறார்.
OLX இணைய தளம் மூலம் எந்த ஒரு பொருளை விற்கும் போதோ வாங்கும் போதோ மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவத்தை பார்த்தாவது மக்கள் உணர வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications