அது எப்படி அனுமதியின்றி வேல் யாத்திரை நடத்தலாம்.. பாஜகவுக்கு ஹைகோர்ட் சுளீர்!
பாஜக சார்பில் நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை காவல்துறை திட்டவட்டமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை: பாஜக நடத்தும் வேல் யாத்திரை கோவில் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை திட்டவட்டமாக உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு சென்றவர்களில் மாஸ்க் போடாதவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக பாஜக பொதுச்செயலாளர் நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யாத்திரையில் எத்தனை பேர் பங்கேற்பர்? எத்தனை வாகனங்கள் கலந்து கொள்ளும் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் காவல் துறைக்கு விண்ணப்பம் அளிக்க பாஜக தரப்புக்கு அறிவுறுத்தியது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்து வாதிட்டார்.
அப்போது அவர், கடந்த 6, 8 மற்றும் 9ம் தேதிகளில் பாஜகவினர் திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டதாகவும், அதில் கலந்து கொண்டவர்கள் தனி மனித விலகலை பின்பற்றவில்லை எனவும் , முக கவசம் அணியவில்லை எனவும், பாஜக தலைவர் முருகன் முறையாக முக கவசம் அணியவில்லை எனவும் டிஜிபி அறிக்கையை மேற்கோள்காட்டி வாதிட்டார்.
மேலும், வேல் யாத்திரை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானதாகவும், இந்த யாத்திரையில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது கோவில் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை எனக் கூறிய அவர், மத்தியில் ஆளும் கட்சியான பாஜ, பொறுப்புடன் செயல்படாமல், சட்டத்தின் ஆட்சியை பின்பற்றாமல் செயல்பட்டுள்ளதாகவும், 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாக கூறிவிட்டு, அதை மீறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நவம்பர் 9 ல் 38 கோவில்களில் 30 உறுப்பினர்கள் வழிபாடு நடத்த அனுமதியளிக்க கோரியுள்ளோம். சுதந்திரமாக செல்ல வகை செய்து கொடுக்க கோரினோம். ஏன் அதிக கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
தொண்டர்கள் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. 18 வாகனங்களில் செல்ல அனுமதி கோரினோம். வேறு வாகனங்கள் சென்றால் நடவடிக்கை எடுக்கலாம் என்று பாஜக தரப்பு வாதிட்டது. அதற்கு நீதிபதி, கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் காவல் துறையினர் மீது தான் குற்றம் கூறப்படும் என்று தெரிவித்தார்.
மற்ற போராட்டங்கள் சட்டவிரோதமானது. பாஜக கூறியபடி 18 வாகனங்கள் மட்டும் செல்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அனுமதி அளிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது. மூன்று நாட்களாக கட்சி தலைவர்கள் கூடியுள்ளனர் என்று தெரிவித்தார்.
தலைவர் வாகனம் செல்ல எந்த இடையூறும் இல்லை. அரசியல் கட்சி தலைவர் செல்லும் போது அவரை வேடிக்கை பார்க்க செல்வர். அவர்கள் மீது குறை சொல்ல முடியுமா என்று பாஜக தரப்பில் வாதிடப்பட்டது.
வேல் ஒரு ஆயுதம். ஆயுத சட்டப்படி அது தடை செய்யப்பட்டது என்று நீதிபதி தெரிவித்தார். கடவுள் முருகன் வேல் வைத்திருந்தால் அது குற்றமா? பாஜக மாநில தலைவர் வைத்திருப்பது மரத்தால் ஆனது. அது தலைவரிடம் தான் உள்ளது. தொண்டர்களிடம் வழங்கப்பட மாட்டாது. அரசியல் மேடைகளில் வாள் பரிசு வழங்கப்படுவது வழக்கம். தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து அமைதியாக யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும். 50-60 தொண்டர்கள் தான் வருகின்றனர் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேவர் ஜெயந்தி அன்று அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளன. விதிகளை அனைவருக்கும் பொதுவாக அமல்படுத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இதுபோல செயல்பட்டால் அதிகாரிகள் தான் சிக்கலில் சிக்கப் போகிறார்கள். அரசு தலைமையில் இருப்பவர்கள் அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், நவம்பர் 30 வரை யாத்திரை தடை செய்யப்பட்டுள்ளது. அரசாணையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும். கோவிலுக்கு செல்ல அனுமதி கோரவில்லை. கோவிலுக்கு தனிநபராக செல்ல எந்த தடையும் இல்லை. ஊர்வலத்துக்கு தான் அனுமதி கோரப்பட்டுள்ளது. எந்த போராட்டத்துக்கும் அனுமதிக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 16 வரை கூட்டம் கூட தடை விதித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் டிசம்பர் 2ஆம் தேதி வரை வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications