வன்னியர் இட ஒதுக்கீடு; கருணாநிதி வழியில் ஸ்டாலின் சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டும் -வேல்முருகன்
சென்னை: வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருணாநிதி வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியை நிலை நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூக நீதி குறித்த புரிதல் இல்லாதவர்களே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தை நாடியதாக அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் மூலம் வாதாடி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் வெற்றிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து... உயர்நீதிமன்றத்தின் 7 வினாக்களும்... ராமதாஸ் அளித்துள்ள பதில்களும்..!
சமூக நீதியின் தொட்டில் என அழைக்கப்படும் தமிழகத்தில் அது குறித்த புரிதல் இல்லாதவர்கள் இருப்பதாக வேல்முருகன் வேதனை தெரிவித்தார். இதனிடையே அவருக்கு முன்னதாக பாமக தலைவர் ஜி.கே.மணியும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தலையில் விழுந்த பேரிடி என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டபூர்வமான முறையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற உறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அளித்ததாக தெரிகிறது.
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக 7 வினாக்களை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் அவற்றுக்கு தமிழக அரசுத் தரப்பில் போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறி நேற்று முன் தினம் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.50% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு ஒரு தரப்பினர் வரவேற்பும் மற்றொரு தரப்பினர் ஆட்சேபனையும் தெரிவித்து வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.