ஒரே நாளில் 3 மாவட்டங்களா! பிரச்சார வாகனத்தில் இருந்து பேசினால் போதுமா விஜய்? அதிருப்தியில் தவெகவினர்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் குறித்த அட்டவணை வெளியாகி அக்கட்சி தொண்டர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் விஜய் மக்களை சந்திக்க உள்ளதாக கூறி இருந்தாலும், ஒரே நாளில் 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அக்கட்சியினர் மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை கணக்கில் கொண்டு பணியாற்றி வருகிறார். ஏற்கனவே மதுரையில் தவெக சார்பாக நடத்தப்பட்ட 2வது மாநில மாநாடு அக்கட்சியின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதன்பின் செப்டம்பர் மாதத்தில் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்ப செப்டம்பர் 13ஆம் தேதி முதல் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குவார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தவெக சார்பாக விஜய் சுற்றுப்பயணம் குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் விஜய் பேச இருக்கிறார்.
அதன்பின் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று விஜய் 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். அதிலும் மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரிய மாவட்டங்களிலும் கூட விஜய் ஒருநாள் முழுமையாக ஒதுக்காதது அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தேர்தலுக்கு முன்பாக விஜய் மக்களை நேரடியாக சந்தித்தால் மட்டுமே அது வாக்குகளாக மாறும்.
ஆனால் விஜய் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் என்ற பெயரில் ஒரேயொரு இடத்தில் மட்டும் பேசிவிட்டு செல்வது மக்களிடையே வரவேற்பை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் மதுரையில் சுற்றுப்பயணம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 4 நாட்களை மொத்தமாக ஒதுக்கி இருந்தார்.
காலையில் ஒரு தொகுதி, மாலையில் ஒரு தொகுதி என்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ததோடு, வணிகர்கள், தொழிலதிபர்கள் என்று ஏராளமானோரை சந்தித்து பல்வேறு வாக்குறுதிகளையும், கோரிக்கையையும் பெற்றுக் கொண்டார். ஆனால் விஜய் மீண்டும் தனது ஸ்டைலில் ஒரு மாவட்டத்தில் ஒரு இடத்தில் மட்டும் பேச இருப்பது சரி வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே தவெக தலைவர் விஜய் வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது கேரவனில் வந்து ஒரே நாளில் 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தால், அவர் கேரவனில் இருந்து அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழும் என்று அக்கட்சியினரே அதிருப்தி அடைந்துள்ளனர். ரோடு ஷோ போல் தவெக தலைவர் விஜய் திட்டமிட வேண்டும் என்பதே அக்கட்சியினர் எண்ணமாக இருக்கிறது. இதனை தவெக மேலிடம் கருத்தில் கொள்ளுமா என்பதை அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தான் தெரியும்.












Click it and Unblock the Notifications