அப்பாவின் உடல்நிலை! அம்மாவின் போராட்டம்! பிரேமலதாவுக்காக பூரித்து போன விஜய பிரபாகரன்! என்ன சொன்னார்?
சென்னை: தமிழகத்தில் ஒரே பெண் அரசியல் தலைவர் பிரேமலதா தான் என விஜய பிரபாகரன் பெருமிதம் பொங்க கூறினார்.
சென்னை திருவேற்காட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்றைய தினம் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விஜயகாந்த் வந்திருந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

அவரின் நிலையை கண்டு தொண்டர்கள் சிலர் கண்ணீர் விட்டனர். இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது கேப்டனின் காலில் விழுந்து ஆசி வாங்கினார் பிரேமலதா.
போகாத நாடு இல்லை: அந்த உணர்வுப்பூர்வமான தருணத்தில் பிரேமலதா பேசுகையில், விஜயகாந்திற்கு உடல்நலம் சரி இல்லாமல் இருப்பதால் 24 ணி நேரமும் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறேன். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்லாத வெளிநாடே இல்லை, வெளியூரும் இல்லை. எல்லா சிகிச்சைகளையும் பார்த்துவிட்டோம்.
இருமல்: அண்மையில் அவருக்கு இருமல் ஏற்பட்டதை அடுத்து பலர் வதந்திகளை பரப்பினர். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இவை அனைத்துமே பொய் செய்திகள். எனக்குள் எத்தனையோ வருத்தங்கள் மன அழுத்தம் இருந்தாலும் இதுவரை எந்த இடத்திலும் கண்ணீர் சிந்தியது இல்லை.

தேமுதிக எம்பிக்கள்: நான் விஜயகாந்தை நன்றாக கவனித்து வருகிறேன். இனி கட்சிக்காக 24 மணி நேரமும் உழைப்பேன். 2026 சட்டசபை தேர்தலில் தேமுதிக நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதுபோல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக எம்பிக்கள் டெல்லிக்கு செல்வார்கள் என தெரிவித்திருந்தார். இந்த பொதுக் குழுவில் பிரேமலதா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு விஜய பிரபாகரன் நியூஸ் 18 தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்.
ஒரே பெண் தலைவர்: அதில் முதலில் பிரேமலதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தற்போது உள்ள ஒரே பெண் தலைவர் பிரேமலதா தான். அவரது தலைமையில் தேமுதிக பெரும் வளர்ச்சி அடையும் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications