இப்பதான் மகிழ்ச்சி.. திமுக அரசை மனசுவிட்டு பாராட்டிய விஜயகாந்த்.. அப்படியே டெல்லிக்கு ஒரு கோரிக்கை!
சென்னை : தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை வரவேற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டம் எங்கும் நடைபெறாத வகையில் மத்திய அரசும் தடை விதிக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், அதற்கென குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின்படி சட்ட மசோதா உருவாக்கப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
வளர்ந்த நாடுகளில் உலகில் 3-வதாக இந்தியா.. சிறந்த தலைமை தான் காரணம்.. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
ஆன்லைன் சூதாட்டங்கள்
ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு ஜூன் 27ஆம் தேதியன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி உருவாக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கடுமையான தண்டனை
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவித்துள்ளது. இதனால், விரைவில் இச்சட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
விஜயகாந்த் வரவேற்பு
தமிழக அரசின் இந்தச் சட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், இந்தச் சட்டத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளிடிட்டுள்ள அறிக்கையில், "ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தமிழகத்தில் தொடர் கதையாகி வந்தது. பல குடும்பங்கள் பணத்தை இழந்து வறுமையில் சிக்கி தவித்து வந்தன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேமுதிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தேன். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது.
தற்கொலைகள் தடுக்கப்படும்
அந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன். பணத்தை வைத்து சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளுக்கு இந்த அவசரச் சட்டம் மூலம் தடை விதிக்கப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் தடுக்கப்படும்.
மத்திய அரசும்
வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றி, அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டம் எங்கும் நடைபெறாத வகையில் மத்திய அரசும் தடை விதிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.