ஆண்களின் பலத்தை பலமடங்கு பெருக்கும் கானா வாழை! இந்த அதிசய மூலிகையின் ரகசியங்கள் தெரியுமா?
சென்னை: இயற்கை அன்னை நமக்கு வழங்கிய எத்தனையோ அரிய வகை மூலிகைகளில் கானா வாழை மிக முக்கியமானது.. சென்னை போன்ற பரபரப்பான நகரங்களில் கூட ஈரப்பதம் உள்ள இடங்களில் சாதாரணமாக வளரக்கூடிய இந்த கீரை, தற்போது சோஷியல் மீடியாவில் திடீரென வைரலாகி கொண்டிருக்கிறது.. இதிலுள்ள நன்மைகளை இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.
கானா வாழை கீரை என்பது நம்முடைய ஆயுளை நீட்டிக்கும் அளவுக்கு நன்மை தரக்கூடிய கீரையாகும்.. நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளான சிறுநீரக பைகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் போன்றவற்றுக்கு அபரிமிதமான வலிமையைத் தரக்கூடியது..

பொதுவாகவே கானா வாழை இலைகளில் புரதம், மாவுச்சத்து மற்றும் நீர்ச்சத்து என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.. இந்த இலைகள் இயல்பிலேயே குளிர்ச்சித் தன்மை கொண்டவை என்பதால், உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமைகிறது.
கானா வாழைக்கீரை அற்புதம்
இன்றைய காலகட்டத்தில் பலரையும் வாட்டி வதைக்கும் மூல நோய்க்கு இது ஒரு அற்புதமான மருந்தாகும்.. இந்த கீரையை சுத்தம் செய்து நீரில் கொதிக்க வைத்து மிளகு சேர்த்துப் பருகினால், தீராத காய்ச்சலும் தணியும்.. மேலும் இது அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது..
அதிலும் ரத்த மூலத்தால் அவதிப்படுபவர்கள் கானா வாழை இலைகளுடன் துத்தி இலைகளையும் சேர்த்து கஷாயமாகப் பருகி வந்தால் ரத்த மூலம் மெல்ல மெல்ல குணமடைய தொடங்கும்.. ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், சிறுநீர்ப்பாதை மற்றும் நுரையீரல் பாதைகளில் உள்ள தொற்றுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் ஆற்றல் இந்த கீரைக்கு நிறையவே உண்டு.
நரம்பு பலவீனத்தை போக்கும்
ஆண்களின் நரம்பு பலவீனத்தை போக்கி தாது விருத்தியை மேம்படுத்துவதில் இந்த கீரை பெரும்பங்கு வகிக்கிறது. கானா வாழை இலையுடன் தூதுவளை பூ மற்றும் முருங்கைப்பூவைச் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, அதனை சூடான பாலில் பனங்கற்கண்டுடன் கலந்து 40 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் பலம் பெறும்.
அல்லது இந்த இலை சாற்றில் ஜாதிக்காயை ஊற வைத்து காயவைத்து பொடி செய்து தினமும் 3 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும்.. மேலும் முருங்கைப்பூ மற்றும் துவரம்பருப்புடன் இக்கீரையைச் சேர்த்துப் பொரியலாகச் செய்து நெய் கலந்து 21 நாட்கள் சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவது தாம்பத்திய வாழ்வைச் செழிக்கச் செய்யும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு பாதிப்பை குறைக்கக் கானா வாழை இலைகளுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து அரைத்துத் தயிரில் கலந்து தினமும் 3 வேளை குடித்து வரலாம்.
பெண்களுக்கு அருமருந்து
புற்றுநோய் நெறிக்கட்டி போன்ற கடுமையான நோய்களை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.. பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் அல்லது வீக்கங்களுக்கு இந்த கீரையை மஞ்சளுடன் அரைத்து பற்று போடலாம்.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை சீர்செய்ய இக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.. முகப்பருக்கள், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வாகிறது..
கானா வாழை போன்ற எளிய கீரைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தைப் பேண முடியும். ஆனாலும் மூலிகைகள் என்பவை பக்கவிளைவுகள் அற்றவை என்றாலும், அவற்றை மருந்தாக பயன்படுத்தும்போது தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்..!!












Click it and Unblock the Notifications