இடைநிலை ஆசிரியர்களை துச்சமாக மதிப்பதுதான் உங்க திராவிட மாடலா?.. சீறும் டிடிவி தினகரன்
சென்னை: இடைநிலை ஆசிரியர்களை துச்சமாக மதிப்பதுதான் திராவிட மாடலா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு சென்னையில் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது.
ஒரே தகுதி, ஒரே பணி என்ற நிலையிலும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களிடையே அடிப்படை ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல.
அதிமுகவுக்கு தாவிய நிர்வாகிகள்.. உடனே 'அதிரடி’ காட்டிய டிடிவி தினகரன்! எடப்பாடிக்கு 300 கோடி செலவு?
ஊதிய முரண்பாடு
இந்த ஊதிய முரண்பாட்டைக் களையக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சென்னையில் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
எதிர்காலம்
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற மாணவச் செல்வங்களை உருவாக்கும் ஆசிரியர்களை ஊதியத்திற்காக இப்படி வருந்த வைப்பதுதான் தி.மு.க.வின் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை ஊதியம்
ஒரே ஒரு நாள் வித்தியாசத்தில் நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளதாக தெரிகிறது. இந்த ஊதிய வேறுபாட்டால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
கோரிக்கை
இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 7ஆவது ஊதியக் குழுவில் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பரிந்துரைக்கப்படும் என அப்போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றவில்லை.
உண்ணாவிரத போராட்டம்
இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 27ஆம் தேதி தொடங்கியுள்ளனர். இன்று 5ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 140 ஆசிரியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முதல்வர் வந்து தங்களை சந்தித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவது பற்றி முடிவு செய்வோம் என கூறியுள்ளனர்.