Exclusive: வெளியே தெரியாத கதை! கோயம்பேடு மார்க்கெட்டின் இன்னொரு முகம் உங்களுக்கு தெரியுமா? வீடியோ!
சென்னை: ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட் கோயம்பேடு.. பல படங்களில் ஓப்பனிங் சீன்களில் நிரம்பி இருக்கும் கோயம்பேட்டிற்கு என்று சில அறியப்படாத முகங்கள் உள்ளன. பலரும் பார்க்காத முகங்கள் உள்ளன! அதை பார்க்கலாமா!
Recommended Video
பகல் நேரங்களில் பரபரப்பாக காட்சியளிக்க கூடிய நம்ம சென்னை இரவு நேரங்கள்ல எப்படி இருக்கும்? டிராபிக் சத்தங்களை கேட்டு ஓய்ந்து போன சாலைகள், அவசரமா நடந்து போனவர்களின் கால் தடங்களை சேகரித்து வைத்த நடைபாதைகள், Thalasophile-களின் தொல்லை இல்லாத கடற்கரை ஓரங்கள் என அப்படியே வேற ஒரு சென்னையாக தான் இருக்கும். உண்மையை சொல்ல வேண்டும்னா சென்னையை பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் பார்க்க தான் அவ்வளவு அழகாக தெரியும்.
ஆனா, சென்னையின் ஒரு தரப்பினருக்கு மட்டும் அந்த இரவு அவ்வளவு அழகானதாக இருந்தது கிடையாது. அவங்க பகல் பொழுதை அதிகம் பார்த்தது இல்லை. அதே சமயம் இரவின் கொடூரங்களை நம்மை விட அதிகம் பார்த்துள்ளனர். அது தான் சென்னையின் கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் மக்கள்தான் அவர்கள்!
சென்னை கோயம்பேடு விஆர் மாலில் அனுமதியின்றி மதுவிருந்து.. ஆட்டம், பாட்டம் என களைகட்டிய பார்ட்டி
முதல் சந்தை
பாரிஸ் கார்னர் பக்கத்தில் உள்ள கொத்தவால் சாவடிதான் முன்னால் சென்னையின் பெரிய சந்தை. அங்கே இட நெருக்கடி ஏற்பட்டதால் கோயம்பேட்டில் புதிய அங்காடி உருவாக்கப்பட்டு 1996-ல் திறக்கப்பட்டது. 295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் கோயம்பேடு சந்தையில் 3 ஆயிரத்து 941 கடைகள் உள்ளன. இரண்டு பிளாக்குகளில் காய்கறியும், ஒரு பிளாக்கில் பழம் மற்றும் மலர்களும் விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வளவு பேர் வருகிறார்கள்?
ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்லும் இடம் கோயம்பேடு அங்காடி. நாளொன்றுக்கு சுமார்10 ஆயிரம் இருசக்கர வாகனங்களும், 4 ஆயிரம் சிறிய ரக சரக்கு வாகனங்களும் கோயம்பேடுக்கு வருகின்றன. தினமும் ரூ.35 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை. சென்னையின் அடையாளங்களில் ஒன்று என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது கோயம்பேடு - தந்தை பெரியார் காய்கறி மார்க்கெட். ஆனா எப்போதும் அடையாளமாக மாற்றப்படக்கூடிய சில இடங்களில் தான் பலரின் அலறல் குரல் வெளி உலகுக்கு கேட்கப்படாமலேயே இருக்கும்.
மார்க்கெட் கதை
பகல் நேரங்களில் நாம பலரும் இந்த மார்க்கெட்டை கடந்து போயிருப்போம் உள்ளே சென்று பொருட்கள் வாங்கிருப்போம். ஆனா இரவு நேரங்கள்ல இந்த மார்க்கெட் எப்படி இருக்கும்? வாழ்க்கை முழுவதும் ஓடி கலைத்து போனவர்களுக்கும், வயதான காலங்களில் எல்லோராலும் கைவிட பட்டவர்களுக்கும், கடைசி நம்பிக்கையாக இந்த மார்க்கெட் இருக்கிறது. இரவு11 மணிக்கு மேல தான் கொஞ்சம் கொஞ்சமா சரக்கு வர தொடங்குகிறது. ஒரு 1 மணிக்கு மேல எல்லாம் காய்கறி மார்க்கெட் பக்கம் பார்த்தால் தினமும் திருவிழா போல கூட்டம் களைகட்டும்.
கல்லூரி
கல்லூரி மாணவர்களில் இருந்து வயதான தாத்தாக்கள் வரைக்கும் லாரிகளில் வந்து இறங்கும் மூட்டைகளை தூக்கிக்கொண்டு ஓடுவதில் படு பிசியாக இருப்பார்கள். பழ கடைகள் 2 மணிக்கு மேலயும் பூ கடைகள் 3 மணிக்கு மேலும் கூட்டம் சேர ஆரம்பிக்கும். அதிகாலை 3 மணிக்கு உங்களால பூ மார்க்கெட்ல ஒரே இடத்துல நிற்க முடியாது அந்த அளவுக்கு கூட்டம் இருக்கும். விழா காலங்களில் சொல்லவே வேண்டாம் 1 மணிக்கு எல்லாம் கூட்டம் கூடிரும். இங்க வேலை பார்க்கும் கூலி தொழிலாளர்கள் ஒவ்வொருத்தரும் நாள் ஒன்றுக்கு 40 மூட்டைகள் வரை கூட தூக்குவாங்க.
உண்மையான பின்னணி!
சரி இவ்வளவு நேரம் நாம வெளிய இருந்து நம்முடைய பார்வையில் அவர்களை பார்த்துவிட்டோம். இப்போ கொஞ்சம் உள்ள போய் அவர்களின் கால்களில் நின்று அவர்களின் அலறல்களை கொஞ்சம் காது கொடுத்து கேட்போம். இங்க சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வரை இருகாங்க. ஆனா அவர்கள் அனைவருக்குமான குடிநீர், கழிப்பறை வசதி எப்படி இருக்கு என்பது கேள்விக்குறி தான். இரவு முழுவதும் மூட்டைகளை தூக்கி களைத்துப்போன பலருக்கும் பகலில் தூங்க ஒரு ஓய்வறை கிடையாது.
கழிப்பறை கூட இல்லை
ஐடியில் பல லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு நாம Job Security பத்தி பேசுறோம். ஆனா இங்க தினசரி 500 ரூபாய் சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்த கூடிய இவங்களுக்கு குடும்பத்தில் ஒரு திடீர் இழப்பு ஏற்பட்டால் கூட போக முடியாது, வேலை பறிபோய்விடும். தலைமுறை தொழிலாளர்களாக இருந்தாலும் இவர்களுக்கு மே தினத்துக்கு கூட விடுமுறை கிடையாது. இப்படியான அவர்களின் இன்னல்கள் குறித்து அவர்களிடமே கேட்டோம்...அவர்கள் படும் இன்னல்கள்..கஷ்டங்களை.. எங்களிடம் தெரிவித்தனர். கோயம்பேடு மார்க்கெட்டின் இன்னொரு முகம் குறித்த முழு டாக்குமெண்டரி கீழே வீடியோவாக இணைக்கப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டின் இன்னொரு முகம் எப்படி இருக்கும் என்பதை காண விரும்புகிறீர்களா.. ஒன்இந்தியாவின் இந்த exclusive டாக்குமென்டரியை பாருங்கள்!