வாட்டர் மேட்டர்ஸ்.. தண்ணீர் சேமிப்புக்கு ஐடியா சொல்ல வாங்க.. சென்னையில் தொடங்கிய அசத்தல் கண்காட்சி
சென்னை: தமிழக அரசு, கேர் எர்த் அறக்கட்டளை, ஸ்மித்சோனியன் டிராவலிங் கண்காட்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, சென்னையில், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த கண்காட்சிக்கு அமெரிக்க துணை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
கோட்டூர்புரம் பகுதியிலுள்ள, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், இன்று இந்த கண்காட்சி முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக துணைத் தூதர் ராபர்ட் ஜி பர்கஸ், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
நாளை, அதாவது பிப்ரவரி 11ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு கண்காட்சி துவங்கும். 29ம் தேதிவரை தினமும் நடைபெறும். மேற்கண்ட நாட்களில், காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை கண்காட்சிக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய, அமெரிக்க தூதரக துணைத் தூதர் ராபர்ட் ஜி பர்கஸ், "மக்களுடன் கலந்துரையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியின் மூலம் நிலையான நீர் மேலாண்மை தொடர்பான சவால்கள் மற்றும் தீர்வுகளை ஆராய, பொதுமக்களை, அதிலும், குறிப்பாக இளைஞர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். இந்த முக்கியமான முயற்சியில், தி ஸ்மித்சோனியன் நிறுவனம் மற்றும் கேர் எர்த் அறக்கட்டளையுடன் கூட்டாளராக மாறியுள்ளதன் மூலம், அமெரிக்க தூதரகம் மகிழ்ச்சியடைகிறது." என்று தெரிவித்தார்.
Water Matters என்ற தலைப்பிலான இந்த கண்காட்சியில், விஞ்ஞானம், புதுமைகள் மற்றும் நிலையான நீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் 53 பேனல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் மையங்கள், கலந்துரையாடும் கற்றல் பரிசோதனைகள் ஆகியவையும் இதில், அடங்கும்.
தண்ணீரை கருப்பொருளாக கொண்ட, நிகழ்ச்சிகளை நடத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு வரவேற்கப்படுகிறது. உரையாற்றுவது, அறிவியல் பயிலரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றை சென்னை நகரின் பல பகுதிகளில் நிகழ்த்த, மக்களுக்கு அழைப்புவிடுக்கிறது அமெரிக்க துணை தூதரகம். நிகிழ்ச்சி நிரல் காலண்டர், அமெரிக்க துணை தூதரக பேஸ்புக் பக்கமான, http://www.facebook.com/chennai.usconsulate இதில் இடம் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், "தமிழக மக்களின் நலனுக்காக இந்த கண்காட்சி நடைபெறுகிறது, இதற்காக, அமெரிக்க தூதரகம், தி ஸ்மித்சோனியன் நிறுவனம் போன்றவற்றுக்கு, நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், "நிலையான நீர் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக இந்த கண்காட்சியை அமைத்ததற்காக, சென்னையின் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். தண்ணீர் நம் வாழ்விற்கு முக்கியமானது, நமது வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சுத்தமான நீரை விட்டுச் செல்வதை உறுதி செய்வது முக்கியம். இந்த கண்காட்சி தண்ணீரை சிக்கனமான முறையில் பயன்படுத்த மக்களுக்கு நினைவூட்டும் என்று நம்புகிறேன்" என்றார்.
கேர் எர்த் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர்.ஜெயஸ்ரீ வெங்கடேசன் பேசுகையில், "சென்னைக்கு போதிய மழைப் பொழிவு கிடைக்கிறது. 4 ஆறுகள் உள்ளன. கடலோரமும் அமைந்துள்ளது. அப்படி இருந்தும், சில நேரம் வெள்ளக்காடாக மாறுகிறது, சில நேரம் பஞ்சத்தால் அவதிப்படுகிறது. எனவேதான், Water Matters கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். மக்களின் ஒத்துழைப்புடன், தண்ணீர் சேகரிப்பு குறித்த வழிமுறைகளை உருவாக்க உள்ளோம் என்றார்.