தேவையில்லாத பில்டப்.. பாஜக அலுவலகத்தில் காத்திருந்தது ஏன்? ஜெயக்குமார் விளக்கம்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு கேட்டு நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க சென்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் பாஜக அலுவலகத்தில் காத்திருந்ததாக விமர்சனம் எழுந்த நிலையில், இது குறித்து ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் இந்த தேர்தலில் போட்டியிட்டால் சுயேட்சை வேட்பாளராகத்தான் மக்கள் கருதுவார்கள் என்றும் இந்த தேர்தலோடு ஓபிஎஸ் கதை முடியும் என்றும் ஜெயக்குமார் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடும் எனத்தெரிகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களை ஓபிஎஸ் அணியினரும் எடப்பாடி பழனிசாமி அணியினரும் அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர்.
நேற்று முதல் இந்த சந்திப்பு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், இன்று இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து ஆதரவு கோரினர். இந்த சந்திப்புக்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பாஜகவின் நிலைப்பாடு என்ன? ஆலோசனைக்கு பின் ஜெயக்குமார் பேட்டி!
சிக்னலில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன
தலைவர்கள் சென்றோம். அனைவரும் பாஜக அலுவலகத்திற்கு அருகே இருந்த ஜி.ஆர்.டி முன்பாக கூடினோம். அங்கிருந்து பாஜக அலுவலகத்திற்கு செல்லும் போது தேனாம்பேட்டை சிக்னலில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. எனது வண்டி முன்னாடி இருந்ததால் நாங்கள் சீக்கிரம் வந்துவிட்டோம். அப்படி சீக்கிரமே வந்ததால் நானும் தங்கமணியும் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் வருகைக்காகத்தான் காத்திருந்தோம்.
ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் போகட்டும்
உடனே அதை பில்டப் கொடுத்து வாசலில் காத்திருந்ததாக பரப்பி விட்டனர். அது உண்மை நிலை இல்லை. மொத்தமாக சென்று சந்திக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தோம். நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்துவதற்காக இந்த கருத்தை தற்போது சொல்கிறேன். இந்தியா ஒரு சுதந்திர நாடு. பாஸ்போர்ட் தேவையில்லை. எந்த மாநிலத்திற்கு யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் போகலாம். ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.
சட்ட ரீதியாகவும் தவறு
ஜனநாயக நாடு, சுதந்திர நாடு.. ஓபிஎஸ் போவதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்... அவர் ஏன் போனார் என்று அவரிடம் கேளுங்கள். டிவிஷன் பெஞ்ச் தீர்ப்புப் படி அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பிறகு ஓபிஎஸ் எப்படி அவர்தான் அதிமுக என்று சொல்ல முடியும். அவர் சொல்வது சட்ட ரீதியாகவும் தவறு.
நோட்டாவிற்கும் கீழே போய்விடுவார்
திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும். அதன் மூலம் அதிமுகவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என செயல்படுவதாக தொண்டர்கள் நினைக்கின்றனர். ஓபிஎஸ் இந்த தேர்தலில் போட்டியிட்டால் சுயேட்சை வேட்பாளராகத்தான் மக்கள் கருதுவார்கள். இந்த தேர்தலோடு ஓபிஎஸ் கதை முடியும் அளவுக்குத்தான் இருக்கும். நோட்டாவிற்கும் கீழே போய்விடுவார்.