செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க உத்தரவிட முடியாது.. பொதுநல வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு!
சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. மத்திய அரசின் இந்த நிறுவனத்தை தமிழக அரசு குத்தகைக்கு கேட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இதற்காக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு இன்னும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.

எதிர்ப்பு
வேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இதில் தொடர்ந்து பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. மக்கள் இடையே இது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும்படி உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த வெர்னிகோ மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

விசாரணை
இந்த மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை திறக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இதில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோர முடியாது.

மத்திய அரசு
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பாடு தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டாமா?,மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க அவகாசம் வழங்க வேண்டாமா? அவர்கள்தான் ஆலோசனைகள் செய்து இதில் முடிவு எடுக்க வேண்டும். நீதிமன்றம் இதில் இப்போதே தலையிட முடியாது, அதனால் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.

சாத்தியம்
மேலும் இந்த தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, மத்திய அரசு பரிசீலிக்கும், விரைவில் முடிவு எடுக்கும் என நம்புகிறோம், மத்திய மாநில அரசுகளே உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம், அதனால் இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்து விட்டனர் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications