பாஜக புறக்கணிப்பு.. வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி.. திடீரென டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை!
இபிஎஸ் அணி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக திடீரென இன்று இரவு டெல்லி செல்லும் அண்ணாமலை செல்ல உள்ளார். டெல்லி செல்லும் அவர், பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் இடைத்தேர்தல் விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு கால தாமதமாகி வந்தது. இதற்கு பாஜகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படாததும், உச்சநீதிமன்ற வழக்கும் காரணமாக பார்க்கப்பட்டது.

வேட்பாளர் அறிவிப்பு
இதனிடையே பாஜகவின் நிலைப்பாடு எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு, பாஜக நிலைப்பாட்டுக்காக அதிமுக காத்திருக்கட்டும் என்று நாராயணன் திருப்பதி கூறி இருந்தார். இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ் அணியின் பணிமனை
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பணி மனை திறக்கப்பட்டது. அந்த பணி மனையில் வைக்கப்பட்ட பேனரில், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலானது தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். ஆனால் அதிமுக இபிஎஸ் அணி உருவாக்கி இருப்பது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி.

பாஜக புறக்கணிப்பு
அதுமட்டுமல்லாமல் இந்த பணிமனை முகப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இதில் பாஜகவின் பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதேபோல் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாட்டைதான் ஆதரிப்போம் என அறிவித்த இதர கூட்டணி தலைவர்களான ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரின் படங்களும் இடம்பெறவில்லை.

டெல்லி செல்லும் அண்ணாமலை
இதனால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினர் பாஜகவை புறக்கணித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று இரவு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் அண்ணாமலை, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இடைத்தேர்தல் மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications