Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பக்கா ஸ்கெட்ச்.. தமிழக அமைச்சரவை மாற்றத்தின் பின்னணியில் ஸ்டாலின் போடும் கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில் புதிதாக மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். மேலும் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் நிர்வகித்து வந்த துறைகள் 3 பேரிடம் பிரித்து வழங்கப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகா ஒதுக்கீட்டின் பின்னணியில் ஜாதி கணக்கு உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அமைச்சரவை நேற்று மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. மூத்த அமைச்சர்களான பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று முன்தினம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

mk stalin dmk cabinet

பணமோசடி வழக்கை செந்தில் பாலாஜி எதிர்கொண்டு வருகிறார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்பது குறித்து அவரே முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதையடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

2 இடங்கள் காலி

அதேபோல் சைவம், வைணவம் குறித்து சர்ச்சையாக பேசிய பொன்முடிக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது பிரச்சனையாக மாறலாம் என்பதால் பொன்முடியின் கட்சி பொறுப்பை பறித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவையில் இருந்தும் கைவிட்டார். இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் 2 இடங்கள் காலியானது.

புதிய அமைச்சராக மனோ தங்கராஜ்

இதையடுத்து நேற்று புதிய அமைச்சராக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் மனோ தங்கராஜ் பதவியேற்றார். மனோ தங்கராஜ்க்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் வசித்து வந்த இலாகாக்கள் மற்றவர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டது.

கூடுதல் இலாகாக்கள் யாருக்கு?

அதன்படி போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் சிவசங்கரிடம் கூடுதல் பொறுப்பாக செந்தில் பாலாஜியின் மின்சாரத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமியிடம், செந்தில் பாலாஜி வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக வழங்கப்பட்டது.

அதேபோல் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த பால்வளத்துறை மனோதங்கராஜிடம் வழங்கப்பட்ட நிலையில் பொன்முடி வகித்து வந்த வனத்துறை மற்றும் கைத்தறி இலாகா கொடுக்கப்பட்டது. இதன்மூலம் ராஜகண்ணப்பன் இனி வனத்துறை, கைத்தறி இலாகா அமைச்சராக செயல்படுவார்.

இதற்கிடையே தான் தற்போது அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவற்றின் பின்னணியில் ஜாதி கணக்கீடு உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பொன்முடி இலாகா மாறியதன் பின்னணி

அதன்படி பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய தலைவர். இவர் உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர். 1989ம் ஆண்டு திமுகவில் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அன்று முதல் திமுகவின் அனைத்து அமைச்சரவையிலும் இடம்பெற்று இருந்தவர். மறைந்த முதல்வர் கருணாநிதி ஒவ்வொரு முறையும் பொன்முடியை தனது அமைச்சரவையில் இணைத்து கொள்வார். ஸ்டாலினும் அதனை கடைப்பிடித்து வந்த நிலையில் தற்போது கழற்றி விட்டுள்ளார்.

இதற்கு அவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது தான் காரணம். ஏற்கனவே கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. அதன்பிறகு பொன்முடியின் கட்சி பதவியான துணை பொதுச்செயலாளர் பதவியை பறித்த முதல்வர் ஸ்டாலின் இப்போது அமைச்சர் பதவியையும் பறித்துள்ளார்.

பொன்முடி உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர். தற்போது அவர் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சரிகட்டும் வகையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கருக்கு மின்சாரத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் எஸ்எஸ் சிவசங்கர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். திமுகவை பொறுத்தமட்டில் வடமாவட்டங்களில் வெல்ல வன்னியர்களின் ஓட்டுகள் முக்கியம். இதனால் வடமாவட்டத்தில் செல்வாக்கான தலைவராக இருக்கும் பொன்முடியின் இடத்தை நிரப்பும் வகையில் வன்னியரான சிவசங்கருக்கு கூடுதல் இலாகா வழங்கப்பட்டுள்ளது.

கவுண்டர் சமுதாயத்தை சரிகட்ட..

அதேபோல் எஸ் முத்துசாமி. இவர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் அவர் நிர்வகித்து வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை என்பது எஸ் முத்துசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜகண்ணப்பன் யாதவ் சமுதாயத்தை சேர்ந்தவர். தற்போது அவருக்கு வனத்துறை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் வரும் தேர்தலில் யாதவ சமுதாயத்தினரின் ஓட்டுகளை பெற முடியும் என்று ஸ்டாலின் நம்புகிறார்.

கிறிஸ்தவர்கள் வாக்குகளுக்காக..

இதுதவிர அமைச்சரவையில் புதிதாக மனோ தங்கராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு ஸ்டாலின் நீக்கினார். இப்போது மீண்டும் மனோ தங்கராஜ்க்கு அமைச்சரவையில் ஸ்டாலின் இடம் வழங்கி பால்வளத்துறையை வழங்கி உள்ளார். இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.

அதாவது தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலுக்குள் வந்துள்ளார். அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இதனால் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் என்பது விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வேண்டும். இதனால் கிறிஸ்தவ நாடாரான மனோ தங்கராஜ்க்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல் மற்றும் ஜாதி கணக்கீட்டை வைத்து தான் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகா ஒதுக்கீட்டை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+