"ஆட்டுக்கு தாடி".. ஆளுநர் "லெவல்' இவ்வளவுதான்.. சவுக்கை எடுத்த சுப்ரீம்கோர்ட்! நாட்டுக்கே முன்மாதிரி
மாநில ஆளுநர்களின் அதிகாரம் என்ன என்பதை இன்று தெரியவைத்துள்ளது சுப்ரீம்கோர்ட்
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்வதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.. இதில், தமிழக அமைச்சரவை முடிவை ஆளுநர் செயல்படுத்தியிருக்க வேண்டும், அவர் தாமதம் செய்ததால் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு, இன்று தீர்ப்பு தந்துள்ளது.. இந்த வழக்கின் தீர்ப்பு, பல்வேறு தாக்கங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனால் பேரறிவாளன் குடும்பத்தினர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து காணப்படுகின்றனர்.
ஆளுநருக்கு உத்தரவிடாமல் உச்சநீதிமன்றமே அறிவித்தது ஏன்? - அதிரடி தீர்ப்புக்கு காரணமான ஆளுநர்!
என்ன காரணம்?
முதலாவதாக, இந்த வழக்கின் தீர்ப்பு ஏன் காலதாமதம் செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.. நீண்டகாலமாக இந்த தீர்மானத்தின்மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்று சுப்ரீம்கோர்ட்டே சுட்டிக்காட்டியது..
முதல் விஷயம்
ஆனால், இது எம்டிஎம்ஏ புலனாய்வு விசாரணையில் இருப்பதால் முடிவெடுக்கவில்லை என்று ஆளுநர் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. எனினும், அந்த விசாரணைக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது.. அதன்பிறகு, 2 நாட்களில் முடிவெடுப்போம் என்று ஆளுநர் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.. ஆனாலும், அதற்கு மாறாக குடியரசு தலைவர் தான் இதை தீர்மானிக்க வேண்டும் என்று பிறகு, ஆளுநர் தரப்பு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது... ஆக மொத்தம், இந்த வழக்கின் தீர்ப்பு இழுத்தடிக்கப்படவும், காலதாமதமாக தீர்ப்பு வரவும் இதுதான் முக்கிய முதல் காரணமாக அமைந்துவிட்டது.
இரண்டாவது விஷயம்
இரண்டாவதாக, ஆளுநரின் தாமத செயல்பாட்டை சுப்ரீம் கோர்ட்டே விமர்சிக்கும் நிலைமைக்கு சென்றுவிட்டது.. அதாவது, சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பிறகும் பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் தாமதிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்... ஒரு மாநிலத்தின் ஆளுநரே என்றாலும், சட்டவிதிகளுக்கு பொருந்தக்கூடியவராகவே இருப்பதே அடிப்படை அம்சம்.. அதனால்தான், ஆளுநரை, "ஹெட் ஆஃப் தி ஸ்டேட்" என்கிறோம்.. இன்றைய ஆளுநரை கடிந்து கொண்டதுபோல், இதற்கு முன்பு நீதிமன்றம் வேறு எந்த ஆளுநரையும் நேரடியாக, பகிரங்கமாக, குற்றம்சாட்டியது இல்லை என்பது மிக முக்கியமான விஷயம்.. ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று நீதிபதிகள் இன்று சொல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், அரசமைப்பு சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக கோர்ட் இப்போது தீர்ப்பளித்துள்ளது..
மூன்றாவது விஷயம்
மூன்றாவதாக, ஆளுநருக்கான அதிகாரம் என்பது எது? அதன் எல்லை எது? அது வரைமுறை எது? என்பது மிகப்பெரிய வாதமாகவே எழுந்துள்ளது.. அதாவது, அமைச்சரவையின் தாமதப்படுத்துவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? என்பதே நேரடி கேள்வியாக உள்ளது.. அதனால்தான், ஆளுநருக்காக மத்திய அரசு வாதாட முடியுமா என்கிற கேள்வியை அன்றே நீதிபதிகள் கேட்டார்கள்.. மாநில அரசு சுதந்திரமாக செயல்படக்கூடியது.. அது ஆளுநர் உட்பட யாருடைய கன்ட்ரோலுக்கும் அடங்கிவிடாது.. அடங்கிவிடவும் கூடாது.. மற்றொருபுறம், மத்திய அரசே என்றாலும், ஆளுநரை மூலம், மாநில அரசின் செயல்பாடுகளில் மூக்கை நுழைக்கவும் கூடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக, அமைச்சரவையின் ஒருமித்த முடிவை, நீர்த்து போக செய்யும் உரிமை எந்த ஒரு ஆளுநருக்குமே கிடையாது என்பதே பதிலாக நமக்கு இன்று கிடைத்துள்ளது. பேரறிவாளன் வழக்கு விசாரணையின்போதே சுப்ரீம் கோர்ட் ஆளுநரின் அதிகாரம் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டது என்று நறுக்கு தெரிவித்தது போல தெரிவித்தது. இதோ.. இன்று தீர்ப்பில் அது உறுதியாகிவிட்டது. எனவே பிற மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு கடிவாளம் போட இந்த தீர்ப்பு இனி முன்னுதாரணமாக வைக்கப்படும்.
நான்காவது விஷயம்
நான்காவதாக, இந்த தீர்ப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டி உள்ளது.. பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பு கேட்டு கொண்டு வருகிறது என்றால், மற்றொரு தரப்போ அதற்கு குறுக்கே நிற்கிறது.. காரணம், நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களையே விடுவித்துவிட்டால், இது மிகப்பெரிய பின்விளைவுகளை உண்டாக்கிவிடும் என்றும், இந்த விடுதலையானது, அடுத்தடுத்த கொலை குற்றவாளிகளை விடுவிக்கவும் ஒரு முன்னுதாரணமாகிவிடும் என்பதே அவர்களின் வாதமாக இருந்தது.. ஒரு தேசத்தின் பிரதமரை கொன்றவரையே சுப்ரீம்கோர்ட் விடுதலை செய்யும்போது, நாங்கள் மிக சாதாரணமானவர்களைதானே கொன்றோம் என்று, பிற கொலை வழக்குகளில் வாதிட வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அமைச்சரவை முடிவின்மீது செயல்படாமல் ஆளுநர் கிடப்பில் போட்டதால்தான் இதுபோல நீதிமன்றமே நேரடியாக தலையிட்டது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
ஐந்தாவது விஷயம்
ஐந்தாவதாக, இந்த தீர்ப்பில் நீதிபதிகளை பாராட்ட வேண்டியுள்ளது.. ஆளுநர் பதவி ஆசைக்கு கட்டுப்படாமல், நியாயத்தின் பக்கம் நின்று, ஆளுநர்களுக்கே ஒரு பெரிய கடிவாளம் போட்டு, அவர்களின் அதிகாரத்தை அவர்களுக்கே விளக்கி உள்ளனர்.. அதேபோல, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஆட்சியை ஆளுநர் மூலம் கட்டுப்படுத்த முயன்ற மத்திய அரசுக்கும், சவுக்கடியை தந்துள்ளனர்.. இனி மாநில சட்டமன்ற அமைச்சரவை தீர்மானங்களின் மீது ஆளுநர் ஒப்புதல் கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தமும், கட்டாயமும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.. எந்த மாநில ஆளுநர் தங்களின் தீர்மானத்தில் தாமதம் செய்கிறாரோ, இனி நேரடியாகவே சுப்ரீம் கோர்ட் போகலாம் என்ற தைரியத்தையும், நம்பிக்கையையும் மாநில அரசுகளுக்கு இன்றைய தீர்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது... இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இந்த விடுதலையை பாஜக செய்திருந்தால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை கொன்றவரை வேண்டுமென்றே பாஜக விடுதலை செய்தது என்று பேசி இருப்பார்கள்... அதனால்தான், நாசூக்காக இந்த விவகாரத்தை சுப்ரீம்கோர்ட்டிடமே விட்டுவிட்டது மத்திய அரசு.
ஆறாவது விஷயம்
ஆறாவதாக, இந்த வழக்கில் பேரறிவாளனின் நடத்தை மிக முக்கியமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது.. அதாவது, பேரறிவாளனுக்கு சிறையில் இதற்கு முன்பு பலமுறை விடுப்பு தரப்பட்டபோதுகூட, அவர் எவ்வித தவறுகளும் செய்யவில்லை என்பதை அன்றே சங்கரநாராயணன் சுட்டிக்காட்டியிருந்தார்.. அதுவும் இல்லாமல், தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும், அவர் தன்னுடைய கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவி செய்தது குறித்தும் வழக்கறிஞர் அப்போது சுட்டிக்காட்டியிருந்ததை நாம் மறுக்க முடியாது.. இதைதான் சுப்ரீம்கோர்ட்டும் பரிசீலித்துள்ளது.. "மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குகிறோம்" என நீதிபதிகள் தங்கள் தங்கள் கூறியுள்ளதே அதற்கு சாட்சி.. மேலும், மனிதாபிமானம் அடிப்படையில், அவரது பெற்றோர் உடல் நலமும் அக்கறையும் பரிசீலிக்கப்பட்டுள்ளது..
ஆளுநர் அதிகாரம்
ஆக மொத்தம், ஆயுள் கைதியாகவே இருந்தாலும்கூட, தன்னுடைய விடுதலைக்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்றாலும்கூட, ஒருவரின் நடத்தை எங்கும் பேசப்படும் என்பதற்கு பேரறிவாளன் ஒரு சிறந்த உதாரணம்.. அதேபோல, அமைச்சரவையைவிட தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று தானாகவே நினைத்து கொள்ளும் ஆளுநர்களுக்கு இன்றைய சுப்ரீம் கோர்ட் வழங்கிது சரித்திரம் வாய்ந்த சவுக்கடி தீர்ப்பாகும்..!