இரண்டே நாள் தான் இருக்கு.. மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பது எப்படி.. ரொம்பவே ஈஸி! எப்படி தெரியுமா
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது ரொம்பவே எளிது. எப்படி இணைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
சென்னை: மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணிகளைத் தமிழ்நாடு மின்சார துறை செய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில், மின் இணைப்பை ஆதாருடன் எப்படி இணைக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுக்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மின்வாரியம் மட்டுமல்ல..தமிழக அரசின் மானியங்கள்..சேவைகளை பெற ஆதார் கட்டாயம்..அரசு அதிரடி உத்தரவு
மின்வாரியம்
இந்தச் சூழலில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கும் பணிகளைத் தமிழ்நாடு மின்சார துறை செய்து வருகிறது. மின் பயனாளர்கள் குறித்த உரிய டேட்டா இல்லாத நிலையில், அந்த டேட்டாவை பெறவே மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2.67 கோடி மின் இணைப்புகள்
மாநிலத்தில் மின்வாரியம் மூலம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. மொத்தம் 2.67 மின் இணைப்புகள் உள்ள நிலையில், இந்த அத்தனை மின் இணைப்புகளுடன் ஆதரை இணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த நவ.15ஆம் தேதி இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்களை மின்வாரியம் நடத்தி வருகிறது.
கால அவகாசம்
முதலில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி தேதி ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், இன்னும் சுமார் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை ஆதார் இணைக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மற்றொரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
எப்படி இணைக்க வேண்டும்
இன்னும் இரண்டு நாட்களே மின் இணைப்பை இணைக்க உள்ள நிலையில், இணைக்காதவர்கள் ஆதாரையும் மின் இணைப்பு எண்களையும் இணைத்து வருகிறார்கள். மானியம் பெறுவோர் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும். ஒரே நபர் தன்னிடம் உள்ள பல மின்சார இணைப்பிற்கு ஒரே ஆதார் விவரங்களைப் பயன்படுத்த முடியும். வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டு ஓனர்கள் ஆதார் விவரங்களைக் கொடுக்கலாம். வாடகையில் இருப்பவர்களும் ஆதார் விவரங்களைக் கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம்.
இணையதளம்
அதேநேரம் ஆதார் விவரங்கள் கொடுப்பதால், அந்த மின்சார கணக்கின் பெயர் மாறிவிடாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வீட்டை காலி செய்யும் போது ஆதார் கணக்கை நீக்கிக்கொள்ளலாம். இதற்காக அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் நேரடி சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. மேலும், https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தில் சென்றும் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம்.