தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. ரஜினிகாந்த்துக்கு "நறுக் குட்டு" வைத்த அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான சட்டசபை, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ரஜினிகாந்த் கருத்து குறித்தும் முக்கிய தகவல்கள் இடம் பெற்று உள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் மிகக் கடுமையாக மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். ஆலையை மூட வலியுறுத்தி போராட்டமும் நடத்தினர்.
தொடர் போராட்டம் நடத்திய மக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் திடீரென குழப்பம் ஏற்பட்டது.
போலீஸ் அங்கிள்.. பிடிச்சி ஜெயில்ல போடுங்க சார் எங்க அம்மாவை.. 3 வயது சிறுவன்
அருணா ஜெகதீசன் ஆணையம்
போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் மொத்தம் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகத் தீவிரமாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன், மொத்தம் 3000 பக்கங்கள் கொண்ட அறிக்கை கடந்த மே 18இல் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தார். இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை சில வாரங்களுக்கு முன்பு அமைச்சரவையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இப்போது சட்டசபை கூட்டம் நடைபெறும் நிலையில், அதிலும் அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
17 பேர் மீது நடவடிக்கை
நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில் பல விவகாரங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. காட்டில் வேட்டையாடுவது போலச் சுடலை கண்ணு செயல்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. மேலும், அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷன், தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
சுடலை கண்ணு
எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், ஒரு போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது என்றும் மேலும், ஒரே போலீசாரை 4 இடங்களில் சுட வைத்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கக் கூறப்பட்டிருந்தது.
ரஜினி
போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி சென்று போராட்டக்காரர்களைச் சந்தித்து இருந்தார். சென்னை திரும்பிய உடன் செய்தியாளரிடம் அவர் பேசும் போது, போராட்டம் நடக்கும் இடத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும் இதன் காரணமாகவே கலவரம் ஏற்பட்டதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாகவும் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விளக்கப்பட்டு உள்ளது.
ஆதாரம் இல்லையாம்
ரஜினிகாந்த் குறித்து அறிக்கையில், "சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். நடிகர் ரஜினிகாந்த் சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் போது பொதுமக்கள் அதைக் கூர்ந்து கவனிப்பார்கள்.. எனவே, அவர் தான் கூறும் தகவலை உறுதி செய்ய வேண்டும். சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை அவர் கூறியுள்ளார்.
பொறுப்புணர்வு வேண்டும்
அப்படியிருக்கும் போது தகவல்களை அவர் முன்னரே சரிபார்ப்பது நல்லது. பிரபலங்கள் கூறும் கருத்துகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வாய்ப்பு உள்ளது. அவை இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. மாறாக அதிகமான பிரச்சனைகளே உருவாக்கும். பிரபலங்கள் நிதானத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். ஆதாரம் இல்லா கருத்துகளைக் கூறுவதை பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.