எடப்பாடி "மகன்"! மிதுன் சும்மா இருந்திருப்பாரா? திரைமறைவில் என்ன செய்தார்? குபேந்திரன் பளீர் அட்டாக்
சென்னை: எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது மிதுன் திரைமறைவில் என்ன செய்தார் என்று யாருக்காவது தெரியுமா? என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதை சமீபத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசிய போது, குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியை தலைமைக்கு கொண்டு வர முன்னோட்டம் பார்க்கிறார்கள்.
அவர் அமைச்சர் ஆனால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறதா?. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் மீது வைக்கப்படும் வாரிசு அரசியல் விமர்சனங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில்,

குபேந்திரன் பேட்டி
கேள்வி: உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் பாலாறும், தேனாறும் ஓட போகிறதா என்று எடப்பாடி கேட்டு இருக்கிறாரே?
பதில்: எதிர்க்கட்சிகள் இப்படி பேசித்தான் ஆக வேண்டும். எந்த ஆட்சி வந்தாலும் பாலாறும், தேனாறுமா ஓட போவது இல்லை. அது மக்களுக்கும் தெரியும். எடப்பாடி ஆட்சியில் என்ன ஊழல் நடந்தது என்று பட்டியல் ஸ்டாலினிடம் இருக்கும். அதை எல்லாம் சொன்னால் எடப்பாடி ஒப்புக்கொள்வாரா? மிதுன் எடப்பாடியின் மகன். எடப்பாடி முதல்வராக இருந்த போது மிதுன் திரைமறைவில் என்ன செய்தார் என்று யாருக்காவது தெரியுமா? எடப்பாடி மீண்டும் ஆட்சிக்கு வந்து இருந்தால் மிதுன் சும்மா இருந்திருப்பாரா? கடைசி கட்டத்தில் தேர்தல் நேரத்தில் மிதுன் எப்படி செயல்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மிதுன் திரைமறைவு
தன்னுடைய தந்தையை மீண்டும் முதல்வராக்குவதில் மிதுன் எப்படி வேலை செய்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது அவர் உதயநிதியை கேள்வி கேட்பது சரியா? ஒரே குடும்பத்தின் கீழ் கட்சி, ஆட்சி இருப்பது ஏற்க முடியாத விஷயம்தான். ஆனால் இதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் இருக்கிறது. தேசிய அளவில் பல கட்சிகள் இருக்கிறது. இதை எல்லாம் தாண்டித்தான் கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும். விமர்சனங்களை எல்லாம் எதிர்கொண்டு அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

ஊழல்
ஊழல்களை ஸ்டாலின் குறைக்க வேண்டும். இதை ஸ்டாலின், உதயநிதி இருவரும் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். 2026ல் திமுகவிற்கு பெரிய வாய்ப்பு உள்ளது. 2031ல் பெரும்பாலும் உதயநிதிதான் முதல்வர் வேட்பாளர். இதற்கு இப்போதே திமுக தயாராக வேண்டும். ஊழல்களை கட்டுப்படுத்த வேண்டும். ஊழல் இல்லாமல் எந்த அரசும் இருக்காது. ஆனால் முடிந்த அளவு இதை தடுக்க வேண்டும். வாரிசு அரசியலை விமர்சனங்கள் இருக்கட்டும். திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி, இரண்டு கட்சி வெளியேறினால் திமுக வெற்றிபெறாது.

கூட்டணி முக்கியம்
திமுக + அதிமுக கூட்டணிக்கு இடையில் ஒன்றரை சதவிகிதம் வாக்கு வித்தியாசம். இதற்காகத்தான் அதிமுக காத்துகொண்டு இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை இழுத்தால் வேண்டுமென்றால் அதிமுக வெற்றிபெற முடியும். கூட்டணிதான் அரசியலை தீர்மானிக்கும். மற்றபடி வாரிசு அரசியல் எல்லாம் தேர்தல் முடிவை தீர்மானிக்காது. பாஜகவிற்கு உதயநிதி எப்படி பதிலடி கொடுக்க போகிறார், எப்படி செயல்படுகிறார் என்று பார்க்க வேண்டும். தமிழ்நாடு முழுக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் சிறப்பு செயலாக்க துறையை உதயநிதி கையில் வைத்துள்ளார்.

தமிழ்நாடு
இவர் தமிழ்நாடு முழுக்க செல்லும் வாய்ப்பு உதயநிதிக்கு உள்ளது. அவர் இந்த துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். வாரிசு அரசியல் விமர்சனம் எல்லாம் சும்மா. அவர் தனது செயல்பாட்டின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும்.வாரிசு அரசியல் பேச்சு எல்லாம் இருக்கத்தான் செய்யும். இது எல்லா காலமும் இருக்கும். விமர்சனத்தை எல்லாம் நல்ல திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் மூலம் சரி செய்ய முடியும். நன்றாக ஆட்சி கொடுத்தால் உதயநிதி மீதான இந்த வாரிசு அரசியல் விமர்சனங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.












Click it and Unblock the Notifications