பேரறிவாளன் விடுதலை: தீர்ப்பு நகலில் 25வது பக்கத்தில் 29ஆவது பாயிண்ட்.. ஆளுநருக்கு நீதிபதிகள் சுளீர்
சென்னை: 142 சட்டவிதிப்படி பேரறிவாளனை விடுவித்தது ஏன் என்பது குறித்து தீர்ப்பு நகலில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் போட்ட நிலையில் பேரறிவாளன் தனது வழக்கில் வென்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து 29 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் நகல் இன்று வெளியானது. அந்த நகலில் வாய்மொழியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதை விட ஆளுநரின் அதிகாரங்களையும் மெத்தனப்போக்கையும் சம்மட்டியால் அடித்தது போல் கூறியிருக்கிறார்கள்.
161 சட்ட விதி
அதில் முக்கியமானது பிரிவு 161 இன் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதுடன் அவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்குள்பட்டவர். 161 பிரிவின் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தாமை அல்லது அதிகாரத்தை பயன்படுத்துவதில் காரணம் சொல்லப்படாத தாமதத்தை செய்யும் போது அது நீதித் துறையின் மறுஆய்வுக்கு உள்பட்டது.
மாநில அமைச்சரவை
அதிலும் குறிப்பாக மாநில அமைச்சரவை குற்றம்சாட்டப்பட்ட சிறை கைதியை விடுவிப்பதற்கான முடிவை எடுத்து அதை ஆளுநருக்கு பரிந்துரைத்து அவரை விடுதலை செய்ய கூறிய போதிலும் இது போன்ற காலதாமதங்களை ஏற்க முடியாது.
பேரறிவாளன்
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழகஅரசின் பரிந்துரையை இரண்டரை ஆண்டுகள் தாமதம் செய்து குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது. ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்திற்கான கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடியவர் தான்.
31 ஆண்டுகால சிறைவாசம்
மனுதாரரின் 31 ஆண்டு கால சிறைவாசத்தை கணக்கில் கொண்டும் பரோலின் போது அவருக்கு சிறைத் துறை கொடுத்த நற்சான்றையும் கருத்தில் கொள்கிறோம். மேலும் 19 வயதில் சிறைக்கு சென்ற மனுதாரர், இத்தனை காலம் சிறையில் இருந்தபடியே பிளஸ் 2 தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
142 சட்டவிதி ஏன்?
இரண்டரை ஆண்டுகளாக 161 இன் கீழ் ஆளுநர் மனுதாரரின் விடுதலையை காலம்தாழ்த்துகிறார் என்றால் இந்த வழக்கை மீண்டும் ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பினால் சரியாக இருக்கும் என நாங்கள் கருதவில்லை. எனவே சட்டவிதி எண் 142 இன் கீழ் மனுதாரரை விடுதலை செய்கிறோம். அவரது ஜாமீனை ரத்து செய்கிறோம் என அந்த நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.