இன்று காலை கிளாம்பாக்கத்தில் நடந்தது என்ன.. ஊரப்பாக்கம் முதல் வண்டலூர் வரை தீர்வு தான் என்ன?
சென்னை: இன்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பிய போது கண்ட காட்சிகளை இப்போது பார்ப்போம். ஊரப்பாக்கம் சிக்னல் முதல் வண்டலூர் மேம்பாலம் வரை என்ன தீர்வு வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வேண்டிய வசதிகள் என்ன என்பதை பற்றியும் பார்ப்போம்.
இந்த செய்தியை எழுதும் நான் கண்ட காட்சிகளை செய்திகளாக விவரிக்கிறேன்.. பலரும் நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் நடந்த தகவல்களை அறிந்திருப்பார்கள். சொந்த ஊரில் இருந்து நேற்று மாலை கிளம்பி இன்று காலை சென்னை வர திட்டமிட்டேன்.. நேற்று மாலையே செய்திகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தேன். முதலில் கிளாம்பாக்கம் போய் ஏற வேண்டும் என்றார்கள். அதன்பின்னர் கோயம்பேட்டில் ஏற்றினார்கள். போலீசார் பாதுகாப்பு, வாக்குவாதம், பேட்டி என கோயம்பேட்டில் நேற்று நிலைமையை பார்த்த போது, விடிந்தால் கண்டிப்பாக ஆம்னி பேருந்துகளை உள்ளே விடமாட்டார்கள் என்பதை அறிந்தேன். எனினும் தாம்பரம் வரை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து ஏறினேன்.

பேருந்தில் வந்த அம்மா, கிளம்பாக்கம் வந்த உடன் சொல்லு தம்பி என்றார். மேலும் தாம்பரம் போகுமா, தாம்பரம் போகாதா என்று டிரைவரை கேட்டபடியே இருந்தார். ஆனால் முதலில் எந்த பதிலும் கூறவில்லை.. பேருந்து செங்கல்பட்டை கடந்து பரனூர் சுங்கச்சாவடி வந்த போது தான் வண்டலூரை வண்டி தாண்டாது என்றார் டிரைவர். அப்போது டிரைவரிடம் ஓடிப்போய் நின்ற ஒரு இளைஞர், பொத்தேரியில இறக்கிவிடுங்கள் என்றார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எதிரே உள்ள பெத்தேரி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டால் எளிதாக போய்விடுவேன் என்று கூறினார். இதையடுத்து அவரிடம் இறக்கிவிடுவதாக டிரைவர் கூறினார். அதன்படியே டிரைவர் இறக்கிவிட்டார்.அப்போதே அவர் பயணிகளிடம் ரயிலில் தாம்பரம், கிண்டி, திநகர், கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம்,எக்மோர், சென்டரல், கடற்கரை, உள்ளிட்ட வழித்தடங்களில் போறவங்க இங்க இறங்கிகங்க என்று சொன்னார். அப்போது அவருடன் பாதி பேர் இறங்கினார்கள். மீதிப்பேர் வேளச்சேரி, பள்ளிக்கரணை மேடவாக்கம், கோயம்பேடு, வடபழனி, பூந்தமல்லி சைடு போகிறவர்கள் என்பது தெரிந்தது.
பேருந்து ஊரப்பாக்கத்தை கடந்த உடன், கிளாம்பாக்கம் டவுன் பேருந்து நிலையத்தின் எதிரே இறக்கிவிட்டார்கள். அங்கு சரியான கூட்டம் இருந்தது. அனைவருமே ஆம்னி பேருந்தில் இறங்கியவர்கள் என்பது தெரிந்தது. அங்கு பல டவுன் பேருந்துகள் நின்று ஆட்களை ஏற்ற முடியாத அளவிற்கு நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் சாலையை ஆபத்தான முறையில் கடந்து சென்று டவுன் பேருந்துகளில் மக்கள் ஏறினார்கள். நிறைய டவுன் பேருந்துகள் விடப்பட்டிருந்ததால், பயணிகள் போக வேண்டிய இடத்திற்கு போவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பேருந்து நிலையத்தில் பெரிய அளவில் கூட்ட நெரிசல் இல்லை. மக்கள் எளிதாக பேருந்துகளில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்கள்.

அதேநேரம் போக்குவரத்து நெரிசல் காரணமாக கிளாம்பாக்கம் டவுன் பேருந்து நிலையத்தில் இருந்து ஊரப்பாக்கம் சிக்னல் வரை போவதற்குள் நீண்ட நேரம் எடுத்தது. ஊரப்பாக்கம் சிக்னலில் போய் வாகனங்கள் திரும்பி மறுபடியும் ஜிஎஸ்டி சாலையில பயணிக்க 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆனது. வண்டலூர் பாலத்திற்கு கீழ் ஏராளமான பயணிகள் பேருந்திற்காக காத்திருந்தனர். அங்கு வரை நெரிசல் அதிகமாக இருந்தது. அங்கு பயணிகளை அடுத்தடுத்து வந்த பேருந்துகள் ஏற்றிக்கொண்டு சென்றன. அதன்பிறகு பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை என எங்குமே நெரிசல் இல்லை. தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர் சென்றது கூட காரணமாக இருக்கலாம். எளிதாக வாகனங்கள் சென்னை நகரை கடந்து சென்றன. பலர் தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை வாகனத்தை எடுத்து வரச்சொல்லி அதில் ஏறி வீடுகளுக்கு சென்றனர். இது தான் கிளாம்பாக்கத்தில் இன்று காலை நடந்த விஷயம் ஆகும்.
ஊரப்பாக்கம் முதல் வண்டலூர் வரை உள்ள பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்திருப்பது ஜிஎஸ்டி சாலை என்பதால் அதிகப்படியான வாகனங்கள் சாலையோரங்களில் பயணிகளை இறக்கிவிடும் காரணத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்கள் அனைத்தும் உள்ளே வந்து இறக்கிவிட்டால் நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் வாகனங்கள் ஊரப்பாக்கம் சிக்னலில் ஊர்ந்து தான் திரும்பி வர வேண்டி உள்ளது. சென்னையில் இருந்து வரும் போது பிரச்சனை இல்லை. சென்னைக்குள் போவதில் தான் பிரச்சனை. மேம்பாலம் இல்லாத காரணத்தால் பேருந்துகள் சிக்னலில் சுற்றி செல்லும் நிலை இருக்கிறது. இதற்கு மேம்பாலம் அமைத்து தீர்வு காண வேண்டும். அதேபோல் கிளாம்பாக்கம் டவுன் பேருந்து நிலையத்தில் டீக்கடை, ஏடிஎம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க வேண்டும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் போர்க்கால அடிப்படையில் அமைத்து திறக்கப்பட்டால் மக்கள் எளிதாக சென்னைக்குள் சென்று வருவார்கள் என்பதால் அதுவும், மேம்பாலமும் தற்போது அவசியம். இதை செய்தால் நிச்சயம் மக்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் காலப்போக்கில் நிச்சயம் நல்ல பலனை தரும்.












Click it and Unblock the Notifications