அந்த 3 பேர் சொல்வதுதான்! “யாருக்கும் கிடைக்காம”.. ஓபிஎஸ் பிளானை போட்டு உடைத்த அணி மாறிய நிர்வாகிகள்!
சென்னை : ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவிய நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டங்களைப் பற்றி போட்டு உடைத்துள்ளனர்.
அதிமுகவைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருமே பல்வேறு வடிவங்களில் திரைமறைவு மூவ்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ், தனக்கு நெருக்கமானவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். தனது அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி தனது ஆதரவாளர்களுடன் விவாதித்து வருகிறார்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி எடப்பாடி அணியில் சேர்ந்துள்ள நிலையில், சின்னத்தை முடக்க ஓபிஎஸ் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் பரபர
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இறுதி தீர்ப்பைப் பொறுத்துதான் அதிமுக கட்சியின் தலைமை அதிகாரம் யாருக்கு செல்லும் என்பது தெரியவரும். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரும் பரபரப்பாக உள்ளனர்.

அதிகாரத்தைக் கைப்பற்ற
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியாது என திட்டவட்டமாகக் கூறியிருப்பதால், ஓ.பன்னீர்செல்வமும், விட்டுக் கொடுக்க துளியும் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. யாருக்கும் சின்னம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, மோதிப் பார்ப்பது என இரு தரப்பும் களமிறங்கியுள்ளதால் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என அதிமுக தொண்டர்களே குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

அணி தாவிய தாராபுரம் நிர்வாகி
இதற்கிடையே, ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு பக்கமும் அணி தாவல் படலங்கள் தொடர்ந்து வருகின்றன. தங்கள் தரப்பை பலப்படுத்திக் கொள்வதற்காக இரு அணியினரும், எதிர் முகாமை நோக்கி வலைகளை வீசி வருகின்றனர். நேற்று முன் தினம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த தாராபுரம் நகர அதிமுக செயலாளர் காமராஜ், எடப்பாடி அணியில் இருந்து விலகி சுமார் 100 நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியில் வந்து இணைந்தார்.

எடப்பாடி அணிக்குத் தாவல்
இதுபுறம் என்றால் ஓபிஎஸ் அணியிலிருந்து நிர்வாகிகள் ஈபிஎஸ் அணிக்குத் தாவியுள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்து வந்த மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மயிலை டி.மாறன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பா.ராஜப்பா, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதிகை கே.பி.சாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஈ.உத்திரகுமார், திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி ஈபிஎஸ் அணியில் இணைந்தனர்.

நெடுஞ்சாலை நகர் வீடு
நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து அவருடைய அணியில் மயிலை மாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்தனர். மேலும், சென்னையில் 2000-க்கும் மேற்பட்டோருடன் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஓபிஎஸ் அணியின் அடுத்தகட்ட திட்டங்களையும் அவர்கள் போட்டு உடைத்துள்ளனர்.

சசிகலா +தினகரன்
ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் அங்கிருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது அணியில் இணைந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.

3 பேர் சொல்வதை
மேலும், ஓபிஎஸ் உடன் இருக்கும்போது எங்களுக்கு உரிய மரியாதை இல்லை. ஓபிஎஸ் இரண்டு விதமான மனநிலையில் உள்ளார். ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சொல்வதை மட்டுமே ஓபிஎஸ் கேட்கிறார். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை முன்னிறுத்த ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார். இதனால் கட்சி படுபாதாளத்திற்குச் செல்லும் என்று கவலைப்படுகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

சின்னத்தை முடக்க
மேலும், சின்னத்தை முடக்க ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார். எனவே அவரிடமிருந்து விலகி வந்து தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்துள்ளோம். அதிமுகவை சாதிக் கட்சியாக ஓபிஎஸ் கொண்டு செல்கிறார். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவியை வழங்கி வருகிறார். இப்படியே சென்றால் அதிமுக வளராது என்பதால் தான் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தற்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

ஓபிஎஸ் முயற்சிகள்
ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவோடு இணைந்து செயல்பட வைக்க திட்டமிட்டு வருகிறார் என்றும் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்கள், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளது ஓபிஎஸ் அணியினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications