விரலை காட்டி.. கண்டித்த அமித் ஷா.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. தமிழிசையின் அடுத்த திட்டம் இதுதான்?
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை நடத்திய விதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை அடுத்து தமிழிசை சௌந்தரராஜன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் தொடர்பாக பாஜக தேசிய மேலிடம் அறிக்கை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை - தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் நீடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அமித் ஷா கண்டிப்பு: இதற்கு இடையில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசை சௌந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக தற்போது திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசையை அழைத்து கண்டிப்பது போல கையால் சைகையை காட்டுகிறார். இதற்கு தமிழிசை பதில் அளிக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழிசையை கண்டிக்கும் விதமாக அமித் ஷா மறுத்து பேசுகிறார்.
விமர்சனம்: இந்த விவகாரத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஒன்று அண்ணாமலைக்கு ஆதரவானவர்கள்.. தமிழிசையை கடுமையாக கேலி செய்கின்றனர். உங்களுக்கு இதெல்லாம் தேவை. நீங்கள் பேசியதற்கு இப்போ பாருங்கள் பதிலடி கொடுத்துட்டாங்க.
உங்களுக்கு இதெல்லாம் தேவைதான். இனிமேல் தலைவரை பற்றி பேசவேண்டாம் என்று கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் தமிழிசை ஆதரவாளர்கள், நாடார் சங்கங்கள்.. தமிழிசையை அவமானப்படுத்திவிட்டார்கள். ஒரு தமிழ் பெண்ணை.. நாடார் பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டார்கள்.
வடஇந்திய அரசியல் தலைவர்களை அமித் ஷா இப்படி கண்டிக்க முடியுமா? அவரால் ஸ்மிரிதி இராணியிடம் இப்படி பேச முடியுமா? ஆளுநராக இருந்த பெண்ணை.. தமிழ்நாடு பாஜகவிற்காக உழைத்த ஒரு பெண்ணை இப்படி நடத்துவது சரியா என்று விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன.
தமிழிசை அடுத்த பிளான்: இந்த நிலையில்தான் தமிழிசை நேற்று இரவு வரை போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்த நிலையில் இன்று நேற்று நடந்த பல மீட்டிங் தொடர்பாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதற்கு இடையில் அண்ணாமலை நடந்து கொள்ளும் விதம், அவர் ரவுடிகளை கட்சியில் இணைத்தது, கூட்டணியில் சொதப்பியது, மூத்த தலைவர்களை கட்சியை விட்டு அனுப்பியது என்று பல விஷயங்களை குறிப்பிட்டு பெரிய ரிப்போர்ட் அனுப்ப உள்ளாராம் தமிழிசை. முக்கியமாக அண்ணாமலையின் வார் ரூம் செயல்படும் விதத்தையும் ரிப்போர்ட்டாக தயார் செய்து மோடியிடம் கொடுக்க உள்ளாராம். இதற்காக மோடியை சந்திக்கவும் நேரம் கேட்க உள்ளாராம் தமிழிசை.
விரைவில் டெல்லி செல்லும் தமிழிசை மோடியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்பார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications