நிற்காமல் எகிறும் தங்கம் விலை! "குறைய வாய்ப்பு இருக்கு ஆனா.." ஆனந்த் சீனிவாசன் சொல்வதை நோட் பண்ணுங்க
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது அடுத்த ஓராண்டில் எந்தளவுக்கு அதிகரிக்கும். வரும் காலங்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா.. என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தான் ஒரு கிராம் தங்கம் விலை ரூ 6000 தாண்டியது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவதே எட்டாக்கனியாக ஆகிவிட்டது.

ஏனென்றால் நம்ம ஊரில் தங்கம் என்பது தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முக்கியமான முதலீடாக இருக்கிறது. அதேபோல திருமணம் உள்ளிட்ட நல்ல காரியங்களிலும் தவிர்க்கவே முடியாத ஒன்றாகத் தங்கம் இருக்கிறது. இதனால் தங்கம் விலை உயர்வு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே தங்கம் விலை ஏன் உயர்கிறது.. அது வரும் காலங்களில் மேலும் உயருமா இல்லை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில், "தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 3 சதவிகிதம் வரி, செய்கூலி சேதாரம் ஆகியவற்றைச் சேர்த்தால் ரூ.6700 வரை போய்விடும். எனவே, தங்கத்தை மெல்ல வாங்க ஆரம்பிப்பது சிறப்பு.
ஏனென்றால் தங்கம் விலை குறைய லேசாகவே வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்கா மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் போது தங்கம் விலை அதிகரிக்குமோ தவிரக் குறையாது. யாரெல்லாம் ரூ.3000 அல்லது ரூ.3500இல் தங்கத்தை வாங்கினார்களோ அவர்கள் பணம் இரண்டு மடங்கு ஆகிவிட்டது எனச் சொல்லலாம். அல்லது சீக்கிரம் இரண்டு மடங்கு ஆகிவிடும்.
புது பார்முலா: தங்கம் நல்ல லாபத்தை நமக்குக் கொடுத்துள்ளது. இனிமேல் நாம் எமெர்ஜின்சி செலவுக்கு 400 கிராம் வாங்கத் தேவையில்லை. 200 கிராம் வாங்கினால் போதும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தங்கம் விலை அடுத்த 18 மாதங்களுக்குத் தங்கம் விலை அதிகரிக்கும் என்றே நான் நினைக்கிறேன். தங்கத்தின் தேவை எப்போதும் குறையாது" என்றார்.
மேலும் அவர் தனது மற்றொரு வீடியோவில், "அமெரிக்காவில் இன்னும் வட்டி விகிதத்தைக் குறைக்க ஆரம்பிக்கவில்லை. அதற்குள் தங்கம் விலை இந்தளவுக்கு அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை மேலும் எகிறும். அடுத்த 15 மாதங்களில் தங்கம் விலை ரூ. 7500 முதல் ரூ.8000 வரை போகும்.
என் காரணம்: அமெரிக்கா மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தான் தங்கம் அதிகரிக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்யாமலேயே தங்கம் விலை அதிகரிக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி எக்ஸ்பையரி ஆகும் கடன் பத்திரங்களை வாங்காமல் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல் எக்ஸ்பையரி ஆகும் கடன் பத்திரங்களை வாங்கிவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பேலன்ஸ் ஷீட்டை குறைக்காமல் இருக்கிறார்கள். இதுவே தங்கம் விலை அதிகரிக்கக் காரணம்.
தங்கம் விலை ரூ.7500க்கு செல்லும் முன்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது கண்டிப்பாகக் குறையும் என எனச் சொல்ல முடியாது. எனவே, இப்போது முதலே சிறிது சிறிதாகத் தங்கத்தை வாங்குவது சரியாக இருக்கும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications