விரைவில் குறையும் மின் கட்டணம்? மாதம்தோறும் மின் கட்டணம் எப்போது! செந்தில் பாலாஜி முக்கிய தகவல்
மாதம்தோறும் மின் கணக்கீடு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
அதேபோல நெசவாளர்களுக்கும், குடிசை வீடுகளுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதல் 100 யூனிட் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி.. கொங்கு மண்டலம் முதல்வரின் கோட்டை.. ஈரோட்டில் களமிறங்கிய செந்தில் பாலாஜி
மின் இணைப்பு
இந்தச் சூழலில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பயனாளர்கள் குறித்த உரிய டேட்டா இல்லாததால் இந்த பணிகள் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.. மானிய மின்சாரத்தைப் பெறுவதற்கு ஆதார் மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் ஏற்கனவே தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டனர்.
மாதம் தோறும் மின் கட்டணம்
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் மாதம்தோறும் மின்சாரத்தைக் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சாரம் கணக்கிடப்படுகிறது. இந்த முறையை மாற்றி ஒவ்வொரு மாதமும் மின்சாரத்தைக் கணக்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதன் மூலம் மின் கட்டணமும் கணிசமாகக் குறையும்.
கோரிக்கை
திமுக சார்பில் தேர்தல் சமயத்திலேயே மாதம் ஒரு முறை மின் கணக்கீடு முறை குறித்துப் பேசியிருந்தனர். இருப்பினும், இதுவரை அத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை.. இதனிடையே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில், திமுகவினரும் அங்குத் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
செந்தில் பாலாஜி
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக 2021 தேர்தல் சமயத்தில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டனர். சுமார் 85% வாக்குறுதிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. மீதமுள்ள வாக்குறுதிகளும் மிக விரைவாக படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
எப்போது
தமிழ்நாட்டில் மிக விரைவில் மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும்.. மின் கணக்கீடு பணியாளர்களில் 50 சதவீதம் பணியிடங்கள் இப்போது காலியாக உள்ளது. இதன் காரணமாகவே மாதம்தோறும் மின் கட்டண முறையை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. மிக விரைவில், இந்த காலியிடங்கள் நிரப்பப்படும்.. மேலும், தமிழ்நாடு முழுக்க வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
அமைச்சர் பதில்
இதனால் கணக்கீட்டாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படுமா எனக் கேள்வி எழும். இரண்டில் எது முக்கியம் எனக் கருதி, விரைவில் முடிவெடுப்போம்.. மேலும், முதல்வர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் நிச்சயமாக மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.. விசைத்தறிகளைப் பொறுத்தவரை 750 யூனிட் முதல் 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.