Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Oneindia Special: பாலியல் தொல்லை தரும் பள்ளிகள்? கல்வி நிலையங்களில் குமுறும் மாணவிகள்! என்ன தீர்வு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணகிரி கிங்ஸ்லின் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி பாலியல் தொல்லை, திருச்சி என்ஐடி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வால்பாறையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்வி கூடங்களில் தொல்லைகளை மாணவிகள் எதிர்கொள்வது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் என்சிசி முகாம் நடத்துகிறேன் என்ற பெயரில் 17 மாணவிகளை நான்கு நாட்கள் பள்ளியில் தங்க வைத்திருக்கிறார்கள். இதற்கான உரிய அனுமதியை பள்ளிக்கல்வித்துறை மட்டும் மாவட்ட என்சிசி தலைமையகத்தில் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

sexual harassment crime police

இந்த நிலையில் முகாமில் பயிற்சியாளரான சிவராமன் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதிகாலையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

மேலும் அந்த புகாரை மறைப்பதற்காக ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகமே உடந்தையாக இருந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக சிவராமன் எலி மருந்தை சாப்பிட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். தொடர்ந்து அவரது தந்தையும் உயிரிழந்தது பல சந்தேகங்களை எழுப்பியது.

இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அவர்கள் வார்டனிடம் புகார் தெரிவித்து இருக்கின்றனர். அப்போது மாணவியின் உடை குறித்து அவதூறாக பேசிய கல்லூரி விடுதியின் வார்டனான பேபி, அந்த மாணவியை திட்டியும் இருக்கிறார்.

இதனையடுத்து மாணவியை அவதூறாக பேசிய வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களிடம் போராட்டம் நடத்திய நிலையில் அவர் மன்னிப்புக் கோரியதோடு, பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் அதற்கடுத்த அதிர்ச்சியாக வால்பாறை சம்பவம் வந்துள்ளது.

வால்பாறை அரசு கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மாணவிகள் தங்கள் கல்லூரியில் கற்பித்து வரும் இரண்டு தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வுக்கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் தங்களிடம் ஆபாசமாக தொட்டு பேசுவதாகவும், ஆபாச மெசேஜ் அனுப்புவதாக புகார் அளித்தனர்

sexual harassment crime police

இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தங்கள் பிள்ளையும் ஏதோ ஒரு வகையில் இப்படி பாதிக்கப்பட்டு இருப்பார்களோ என்ற அச்சம் அவர்களிடத்தில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த நிலையில் கல்வி கூடங்களில் பாலியல் தொல்லை குறித்த சம்பவங்கள் குறித்து மாணவிகள் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்கிறார் அமைதி அறக்கட்டளையின் தலைவரான ரூபா பாலன்.

பல ஆண்டுகளாக கிராம மக்கள் முன்னேற்றம், கல்வி விழிப்புணர்வு உள்ளிட்டவற்றோடு, மத்திய அரசின் நிதி அயோக் உறுப்பினராகவும் இருக்கும் அவர் இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசினார். “கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளில் பெண் குழந்தைகள், மாணவிகள் பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் போது அங்கு புகார் அளிக்க கமிட்டிகள் அமைத்திருக்க வேண்டும்.

அதில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதனை செய்வதில்லை. பள்ளிகளிலேயே புகார் புத்தகம் வைத்திருக்க வேண்டும். அதில் மாணவிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் போது நிச்சயம் அதன் பாதிப்புகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தற்போது அவை முற்றிலும் செயல்படவில்லை என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது.

மேலும் பள்ளியில் அல்லது கல்லூரியில் மாணவிகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் புகார்களை தெரிவிக்கும் போது கல்வி நிறுவனங்களின் பெயர் கெட்டுவிடும் என அதனை மூடி மறைக்கவே கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி செய்யக் கூடாது. தங்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ இப்படி ஒரு சம்பவம் நடந்தது.. அதனை நாங்கள் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என வெளிப்படையாக கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

திருச்சி என்ஐடி விடுதியில் கூட மாணவி புகார் அளித்த போது வார்டன் அந்த மாணவியின் உடை குறித்து பேசி இருக்கிறார். ஒரு மாணவியின் விடுதியில் அவர் அவருக்கு பிடித்தமான அல்லது சவுகரியமான உடையுடன் இருப்பது அவரது தனிப்பட்ட உரிமை. அவரது உடைகுறித்து பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் யாருக்கும் கிடையாது. அதே நேரத்தில் ஒரு ஒப்பந்த பணியாளர் விடுதிக்குள் சென்று இருக்கிறார் என்றால் அவருடன் வார்டனும் சென்றிருக்க வேண்டும். ஆனால் அங்கு அப்படி நடக்கவில்லை. மேலும் இந்த சம்பவத்தை மூடி மறைக்கவே அவர்களும் முயற்சித்து இருக்கிறார்கள்.

இப்படியாக கல்வி நிறுவனங்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றினாலே இது போன்ற பிரச்சனைகளை எளிதாக தவிர்த்து விடலாம். அதேபோல பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள், குறிப்பாக பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பின்னால் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் மகள் புகார் அளிக்க வருகிறார் என்றால் அவருக்கு தேவையான உதவிகளையும் ஆதரவையும் பெற்றோர் நிச்சயம் வழங்க வேண்டும்.

அதேபோல தனக்கு ஒரு அநீதி நேர்ந்து விட்டது என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்க வேண்டியது பாதிக்கப்பட்ட அந்த மாணவிதான். இதனால் தனது பெயருக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடுமா என நினைக்க கூடாது. அந்த தைரியத்தை தர வேண்டியது நாம் தான்.. பாதிக்கப்படும் மாணவிகள் அன்றே தங்கள் புகாரை பெற்றோர்களிடமோ அல்லது கல்லூரி நிர்வாகத்தினரிடமோ தெரிவிக்க வேண்டும். மேலும் அரசு சார்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1091 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கூட தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவிக்கலாம்.. பாதிக்கப்பட்டவர்கள் முதல் ஆளாக குரல் கொடுத்தால் தான் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+