500ம், ஆயிரமும் இன்று பேசினால்...!
- லதா சரவணன்
நவம்பர் 8
வணக்கம் நாங்கள் தான் 500,1000 ரூபாய் நோட்டுக்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் கரங்களில் கெத்தாக பர்ஸின் கனத்தில் தைரியமாக உங்களின் ஸ்பரிசத்தில் தன்னையே மறந்தபடி விளையாடிக் கொண்டிருந்தவர்கள்தான் நாங்கள் அத்தனை சீக்கிரம் எங்களை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

தமிழனுக்கு மறதி என்பது கிடையாது. பழமையையும் போற்றி பாதுகாக்கும் சமுதாயம் நம்மது என்ற கெளரவத்தில் எங்களுக்கும் பங்குண்டு. எங்களோடு பழகிய சக தோழர்களாக 100 ரூபாயும் 50 ரூபாயும் கூட மாறிக்கொண்டே வருகிறது என்று கேள்விப்பட்டோம். வெறும் வண்ணக் காகிதங்களாக மட்டும் நாங்கள் உங்கள் கைகளில் தவழவில்லை, அன்பான உறவுகளோடு ஆசையாய் பரிமாறப்பட்டு இருக்கிறோம். திருமணச் சீராய் மகளுக்குச் செலவாகும்போது தந்தையின் பாசத்தோடு சென்றோம். வளைகாப்பு பெண்ணின் வளையல்களாய்ச் சிணுங்கினோம். காதலைப் பறைசாற்ற கணவன் மனைவிக்கும் அன்பு காதலர்களுக்கும் நடுவில் செலவிடப்படும்போது அந்தக் காதல் காற்றைச் சுவாசித்தோம். பெற்ற பிள்ளையின் தங்க கரங்களுக்கு தகப்பன் செலவிடும்போது ஈன்றபொழுதின் உவகை அடைந்தோம், உண்டியலிலும் கடுகு டப்பாக்களிலும் அன்னையின் முந்தாணையிலும் ஒளிந்துக்கொள்ளும் சுகத்தை இனிநாங்கள் அனுபவிக்கப் போவதில்லை, இளசுகளின் குறும்பில் கைக்கு அடங்கிப் போவதில்லை
என்ன தவறு செய்தோம் ? எதற்காக இத்தனை அன்பிலும், உணர்வுகளிலும் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறோம். யார் யாரோ எங்களை சிறை வைத்தனரே அதற்காகவா வெறும் செல்லரிக்கப்போகும் எங்களை சுவற்றில் அடைத்து வைத்தாற்களே அதனாலா ? வட்டிக்கு உயிர்கொல்லும் ஒரு கருவியாய் நாங்கள் மாறிப்போனோமே. அதுதான் எங்கள் சாபமா ? எது எங்கள் தவறு ?! செல்லரிக்கும் நோட்டிற்காய் மனிதன் புல்லுருவியாய் மாறிப்போக காரணமாய் இருந்தோமோ அதனாலா ?
என்ன காரணத்திற்காக நாங்கள் தவழ வேண்டிய கைகளாலேயே கிழிக்கப்பட்டோம். தூங்கிக்கொண்டு இருக்கும் மக்களை தன் அலைக்கரங்கள் மூலம் சுருட்டிக்கொண்டு ஓடும் சுனாமியின் முடிவில் அநாதரவாய் நிற்கப்பட்டவர்களைப் போல நாங்கள் செல்லுவோமா மாட்டோமா இன்னும் எத்தனை நாள் எப்படி என் சேமிப்பை காப்பாற்றப்போகிறேன் என்றெல்லாம் எங்களை ஆயிரம் ஏன் லட்சம் கோடி சந்தேகக் கண்கள் பார்த்ததே அப்போது நூறு முறை கற்பழிக்கப்பட்டதைப் போல உணர்ந்தோம்
இதே போன்ற நடவடிக்கை 1946 ஆண்டு 1000, 10000 மதிப்புள்ள பணத்தாள்களும் விலக்கிக்கொள்ளப்பட்டது அப்போது அவை என்ன ஒப்பாரிவைத்தா அழுதது என்று சிலர் கேட்கும் கேள்விகள் எங்கள் காதுகளில் விழத்தான் செய்கிறது
எங்காவது வெளியே போனால் 1000, 500ம்ன்னா சட்டுன்று கொண்டு போயிடலாம் ஆனா 100, 50 ஐ எப்படிப்பா கொண்டு செல்வது என்று யோசித்தவர்கள் எல்லாம் நவம்பர் 8 நாங்கள் தொலைந்த அன்று 100. 50 ரூபாயிடம் சரணடைந்தார்கள். மிக நீண்ட வரிசையில் விருந்தாளிகளுக்குத் தரப்படும் ஒற்றை லட்டுக்கு கைகட்டி நிற்பதைப் போல நின்றார்கள். அந்த ஆறுமாத காலம் சாமானிய மக்கள் திருமணமான புது மனைவியைப் பார்ப்பதைப் போல, பத்துமாதம் சுமந்து பிள்ளைப் பேறு அடைந்த பெண்ணைப் போல புது 2000 ரூபாய் நோட்டைக் காண பரவசம் அடைந்தார்கள்.
அது சரி ஊழல் ஒழிந்ததா ? பொருளாதாரத்தின் வீழ்ச்சி நிமிர்ந்ததா என்ற கேள்விகளுக்கு பெரியாரின் வெங்காயம் தான் பதில். பெருஞ்சாதனை செய்தவர்களும் பேரழிவுக்கு காரணமானவர்கள் எல்லாரையும் போல் நாங்களும் சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டோம். மிக நீண்ட பதிவுக்கு எங்களுக்கு நேரமில்லை புதிய கலர் காகிதத்தால் எங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இன்னமும் புழக்கத்தில் இருக்கும் எங்கள் நண்பன் 100 ம் 50தையும் பார்த்துக்கொள்ளுங்கள்
ஹேப்பி டிமான்ஸ்டிரேஷன் டே
உங்கள் பரிதாபத்துக்குரிய
1000ம் 500ம்












Click it and Unblock the Notifications