போச்சு.. இன்னொரு விக்கெட்.. தெறித்துஓடும் "தலை"கள்.. மய்யத்துக்கு என்னாச்சு.. கமல் என்னதான் செய்தார்
கமலின் மநீமய்யத்தில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்
சென்னை: என்ன ஆச்சு மக்கள் நீதி மய்யத்துக்கு? ஆபீஸ் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி வருவார்களோ, அதுமாதிரி, ஒவ்வொருவராக கட்சியை விட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்? ஏன் இந்த திடீர் மாற்றங்கள்?
Recommended Video
கடந்தவாரம் முதல் விலகல் புள்ளியை மநீம துணைத் தலைவர் மகேந்திரன் வைத்துவிட்டு போனார்.. தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, "கமல் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை.. மாறிவிடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை " என்று பகிரங்கமாகவே காரணத்தை சொல்லிவிட்டு விலகினார்.
மகேந்திரன் விலகலை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்திருந்தார்... தொடர்ந்து மநீம தலைமை நிலையப் பொதுச் செயலாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர். சந்தோஷ் பாபு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ்பாபு, மதுரவாயல் வேட்பாளர் பத்மப்ரியாவும் விலகல்!
கட்சி
அதில், 'கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எல்லாருமே கட்சியை விட்டு வெளியேறி விட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது. மகேந்திரன் மட்டுமே கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்... கட்சியின் கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும்'' என்று விளக்கம் தந்திருந்தார்.
விலகல்
அதன்படி, ஏதோ மாற்றம் நடக்கப்படும் என்று பார்த்தால், மாற்றத்தை தருவதாக அறிக்கை விட்ட சந்தோஷ் பாபுவே இன்று கட்சியில் இருந்து விலகிவிட்டார்.. ‛மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது எனது தனிப்பட்ட காரணங்களால் எடுக்கப்பட்ட முடிவு. கமல்ஹாசன் மற்றும் கட்சியினர் எனக்கு அளித்த பாசத்திற்கும், நட்பிற்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
பத்மபிரியா
கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராக இருந்துவந்த பத்மபிரியாவும் கட்சியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஏற்கனவே தேர்தலுக்கு முன்னாடியே, கமீலா நாசர் கிளம்பி போய்விட்டார்.. இவர்கள் எல்லாம் ஏதோ சாதாரண நிர்வாகிகள் என்று எடுத்து கொள்ள முடியாது.. கமலுக்கு அடுத்தபடியாக அந்த கட்சியில் மிகவும் செல்வாக்கானவர் மகேந்திரன்..
திமுக
கோவையில் இவர் பெற்ற வாக்குகளை பார்த்து அதிமுக, திமுகவே அரண்டு போய்விட்டது.. இவர் இருக்கும் தைரியத்தில்தான் கமல் கோவையில் போட்டியிட்டார்.. ஆனால், மகேந்திரனே விலகியபோது, பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது.. அதிலும் கமல் மீதுதான் முழு குறையையும் சொல்லிவிட்டு போனார்.. அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் கமலை டென்ஷன் ஆக்கியது.. அதனால்தான் கமல், காட்டமான அறிக்கையை அப்போது விடுத்திருந்தார்.
அதிகாரி
தகவல் தொடர்புத்துறை செயலராக இருந்த சந்தோஷ்பாபு ஐஏஎஸ் இருந்தவர்.. அந்த பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்று கமல் கட்சியில் இணைந்தவர்.. படித்தவர்கள் குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் நிறைந்த மதிப்பு மிக்க கட்சியாக மநீம விளங்கி கொண்டிருந்தது.. ஆனால், 4 நாளைக்கு முன்புதான் விளக்க அறிக்கை விடுத்தவர், திடீரென இன்று விலகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது.. இந்த இடைப்பட்ட 4 நாட்களுக்குள் இவருக்கு என்ன ஆயிற்று? என்ற கேள்வியும் எழுகிறது.
கமீலா
கடந்த முறை எம்பி தேர்தலில் கமீலா நாசர், போட்டியிட்ட தொகுதியில் 3 வது இடத்தை பிடித்தவர்.. அந்த அளவுக்கு சென்ற முறை வேறு எந்த பெண் வேட்பாளரும் இவ்வளவு ஓட்டுக்களை வாங்கவில்லை.. கமீலா விலகலுக்கு காரணமும் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.. இந்தநேரத்தில் இன்னொரு பெண் வேட்பாளரான பத்மபிரியாவும் விலகி இருக்கிறார்.. மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு 33,401வாக்குகளைப் பெற்று 3ம் இடம் பிடித்தவர்தான் பத்மபிரியா.
அணுகுமுறை
இந்த விலகல்கள் எதற்காக? ஒட்டுமொத்தமாக இவர்கள் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக உணர்த்தும் செய்தி, கமலின் செயல்பாடுகள்தான்.. ஓபனாக அவர் இல்லை, அணுகுமுறை சரியில்லை.. என்பதுதான்... டாமினேட்டிங் கேரக்டராக கமல் இருப்பதாகவும், கட்சியில் யாருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதில்லை என்பதும் பொதுவாக சொல்லப்படும் காரணங்கள்.. அவ்வளவு ஏன், திமுக வெற்றி பெற்றதற்கு, கமல் மட்டும்தான் ஸ்டாலினை சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தார்.
நிர்வாகிகள்
பொதுவாக ஒரு கட்சி தலைவரை சந்திக்க போகும்போது, சொந்த கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து செல்வது வழக்கம்.. கமல் கட்சியில் அப்படி யாருமே இல்லையா? எல்லாமே "ஒன் மேன் ஆர்மியா?" என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.. எப்பவுமே மேல்மட்ட அரசியலை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதுமா? வெகுஜன மக்கள் மனசிலும் இடம்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமா என்ற கேள்வியும் கமலிடம் நமக்கு எழத்தான் செய்கிறது.
மநீம
கட்சி ஆரம்பித்து 2 வருஷத்தில், பரபரப்பாக பேசப்பட்டது மநீம.. திமுகவே ஒருகட்டத்தில் இறங்கி வந்து கமலுடன் கூட்டணி வைக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு முன்னேறியது.. ஆனால் தான் ஒரு வலுவான தலைவராக கமல் நிரூபிக்க தவறிவிட்டாரா? அல்லது நிர்வாகிகளை அரவணைக்க தவறிவிட்டாரா? தெரியவில்லை.. ஆனால், எங்கோ தவறு நடந்துள்ளது என்று மட்டும் தெரிகிறது.
வெற்றி?
அதேநேரத்தில் கமலை மட்டுமே குற்றஞ்சாட்டுவதற்கில்லை.. இன்றைக்கு கட்சியில் இருந்து விலகியவர்கள் எல்லாம் கமலுக்காகத்தான் கட்சியில் சேர்ந்தோம் என்று சொல்கிறார்கள்.. அப்படி என்றால் ஏன் விலக வேண்டும்? வெற்றியோ, தோல்வியோ, கட்சி தலைவருக்கு ஆதரவாகவும் பக்க பலமாகவும் நிற்க வேண்டியதுதானே? ஒருவேளை இவர்கள் எல்லாம் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று மய்யத்தில் சேர்ந்தார்களா?
சுயநலம்
கட்சி தோற்றதும் ஆளுக்கு ஒரு பக்கம் கிளம்பி செல்கிறார்கள் என்றால், இது கடைந்தெடுக்கப்பட்ட சுயநலம் இல்லையா? நன்றிக்கெட்ட தனம் இல்லையா? ஒருவேளை கமல் வெற்றி பெற்றிருந்தால் இவர்கள் எல்லாம் இன்றைக்கு விலகி இருப்பார்களா? இப்படி எல்லாம் விலகுவது கமல்ஹாசனை அவமதிக்கவில்லை... மாறாக இந்தக் கட்சியை நம்பி வாக்களித்த கிட்டத்தட்ட 17 லட்சம் பேரை உதாசீனப்படுத்தியுள்ளனர்...
முகவரி
இவர்கள் எல்லாம் யார் என்றே பலரும் அறியாத நிலையில், கமல் என்ற முகத்தை பார்த்துதான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர்.. கமல் என்ற மனிதர் இல்லாவிட்டால் இவர்களுக்கு ஏது "முகவரி"? இந்த விஷயத்தில் நாம் தமிழர் கட்சியை ஒப்பிட வேண்டி உள்ளது.. அந்த கட்சியலும் விலகல் நடந்தது.. நிறையப் பேர் கட்சியை விட்டு போனார்கள். கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி என்று அந்த வரிசை மிகப் பெரியது.. ஆனாலும் சீமான் நிலை குலையவில்லை.. ஏன் கட்சியே கூட ஒன்றும் ஆகவில்லை.
அட்ரஸ்
யாரெல்லாம் விலகிப் போனார்களோ அவர்கள்தான் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார்கள். மாறாக நாம் தமிழர் கட்சி மேலும் மேலும் வலுவடைந்துள்ளது. அதேசமயம், தேர்தலில் போட்டியிட்ட கையோடு அந்தக் கட்சியில் யாரும் விலகியதாக நினைவில்லை. தோல்வியைத் தழுவி வருவது மட்டுமே அக்கட்சியின் மிகப் பெரிய சோகமாக இருக்கிறது. ஆனாலும் அக்கட்சியினர் உற்சாகத்துடன் இருக்கின்றனர். காரணம், தெளிவான கொள்கையை வரையறுத்து தலைவன் வழி நின்று அவர்களது கட்சியினர் நடை போடுவதுதான். இப்படி தேர்தல் முடிந்தும் கழண்டு கொண்டு போய்விடவில்லை..
விஸ்வரூபம்
ஒரு அரசியல் கட்டமைப்பு அந்த கட்சிக்கு உள்ளது.. அதை மய்யம் இனி கற்று கொள்ள வேண்டும்.. அத்துடன் கமலும் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.. காரணம், கமலை இன்னும் ஏராளமான இளைஞர்கள் மலைபோல் நம்பிக் கொண்டுள்ளனர்.. அவர்களுக்காகவாவது வேறு ஒரு விஸ்வரூபத்தை கமல் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார். வருகிற போகிறவர்களையெல்லாம் கட்சியில் சேர்க்காமல் கொள்கைப் பிடிப்புடையவர்களை மண்ணின் மணத்தைப் புரிந்தவர்களை, மண்ணை உண்மையாக நேசிப்பவர்களை தன்னுடன் சேர்க்க அவர் முன்வர வண்டும்!
சீமான்
அதற்கு முதலில் அவரே தான் ஒரு எலைட் அரசியல்வாதி என்ற பிம்பத்தை விட்டு வெளியே வர வேண்டும். சீமான் போல வியர்க்க விறுவிறுக்க சண்டை செய்யும் ஒரு அரசியல்வாதியாக அவர் மாறியாக வேண்டும். மாறுவாரான்னு பார்க்கலாம்.