புதுசு.. தமிழ் வழியில் மருத்துவ படிப்பு.. எப்போது தொடங்கப்படும்? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்
சென்னை: தமிழ் வழியில் மருத்துவ படிப்பை எப்போது தொடங்கப்பட உள்ளது என்பது குறித்த சில முக்கிய தகவல்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் மருத்துவ படிப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. இப்போது முதாலமாண்டு பாடங்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது.
வரும் காலத்தில் அடுத்தடுத்து ஆண்டுகளின் புத்தங்களும் வெளியிடப்பட்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல தமிழிலும் மருத்துவ நூல்களை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.
டெங்கு விழிப்புணர்வு..மழைக்காலம் காய்ச்சல் முகாம் தொடரும்..அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி!
தமிழ் வழியில்
தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு இது பெரியளவில் உதவியாக இருக்கும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில் தமிழ் மருத்துவ படிப்பு தொடர்பாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 32 லட்சம் மதிப்பில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கி, பெண்களுக்கான சிறப்புச் சிகிச்சை மையங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல புதிய வசதிகள் தொடங்கப்பட்டு உள்ளன. புற்றுநோய் மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பால் போடுபவர்களுக்கு மாற்றுச் சிகிச்சையாக ரேடியோ அலைவரிசை வலி நிவாரண சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. வேறு எந்தவொரு மருத்துவமனையில் இல்லாத வகையில் இந்த வசதியை ரோட்டரி சங்கம் உதவியோடு ஏற்பாடு செய்துள்ளோம்.
சிகிச்சை
இங்கு மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இதுபோன்ற வலி நிவாரண சிகிச்சை மையத்தை அமைக்க உதவ வேண்டும் என்றும் ரோட்டரி சங்கத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு 40,000 வரை செலவாகும். ஆனால், ஓமந்தூரார் மருத்துவமனையில் இது முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் வழி மருத்துவக் கல்லூரி
இது மட்டுமின்றி மனநல சிகிச்சை, புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டு உள்ளது. கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியவும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் இருந்தே தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் கல்லூரி அமைத்து, அதைத் தமிழ் வழி மருத்துவக் கல்லூரியாக மாற்றக் கேட்டு இருந்தோம்.
எப்போது
இருப்பினும், அதற்கு முன், மருத்துவக் கல்லூரி இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்கலாம் என முடிவு செய்துள்ளோம். எனவே, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை இடம் வைத்துள்ளோம். இதற்கான முடிவை மத்திய அரசு கொடுத்த பிறகு சென்னையில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரியைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மொழி பெயர்ப்பு பணிகள்
மூன்று மருத்துவ பேராசிரியர்கள் கொண்ட குழு மருத்துவ பாடப் புத்தகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து வருகின்றனர். முதலாண்டு மருத்துவக் கல்லூரி பாடப் புத்தகங்கள் மற்றும் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. புத்தகம் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களை வல்லுநர்களிடம் கொடுத்துச் சரி பார்க்கப்படும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.