தமிழகம்ன்னாலே.. இந்த "இரண்டு" பேரும் தானா.. ஸ்டாலின் கை ரொம்பவே "ஓங்குது" போலயே!
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக எந்த கட்சியும் தமிழகத்தில் இல்லை
சென்னை: தேர்தல் என்றாலே, ஆட்சி என்றாலே, ஏன் தமிழ்நாடு என்றாலே அதிமுக, திமுகதான் என்ற நிலை இன்னும் மாறவில்லை என்றே தோன்றுகிறது.. அப்படி என்றால், மாற்று என்பது இல்லையா? மாற்று கட்சிகளால் தாக்கத்தை தர முடியவில்லையா என்ற சந்தேகமும் எழுகிறது.
50 ஆண்டு காலம் திமுகவும், அதிமுகவும் தமிழக மண்ணை ஆண்டு வருகின்றன.. இப்படி ஆள்வதற்கு பல கட்சிகள் உறுதுணையாகவும், கூட்டணியிலும் பங்கு வகித்து உதவி வருகின்றன..
ஆனால், எந்த கட்சியும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இதுவரை இருந்தது இல்லை. பலர் முயற்சித்தும் கூட முடியவில்லை என்பதே எதார்த்தமாக உள்ளது.
பாஜக
மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று பரபரப்பை கிளப்பியது. ஆனால் மக்கள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.. திராவிடத்துக்கு மாற்று என்று வந்த பாஜகவையும் வேண்டாம் என்று நிராகரிக்கிறார்கள்.. எவ்வளவுதான் திராவிட இயக்கங்களின் மீது ஆயிரம் விமர்சனங்கள் முன்வைத்தாலும், மீண்டும் மீண்டும் இவர்களைதான் மக்கள் உச்சாணி கொம்பில் தூக்கி வைத்து வருகிறார்கள். ஜனநாயக நெறிகளை காக்கக்கூடிய வலுவான எதிர்க்கட்சி இல்லையா? அல்லது பிற கட்சிகளால் திமுக, அதிமுகவுக்கு ஈடு தரமுடியவில்லையா என்பது பல ஆண்டு கால கேள்வியாகவே உள்ளது.
கூட்டணிகள்
இந்த முறை தேர்தலிலும் இதுதான் பிரதிபலிக்கிறது.. தேர்தல் களை கட்டி வருகிறது.. வழக்கம்போல், திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிகள் உருவாகி வருகின்றன.. மநீம, சீமான் போன்ற கட்சிகள் யாருடனும் எங்களுக்கு கூட்டு இல்லை, 8 கோடி மக்களுடன்தான் நேரடியான கூட்டணி என்று சொல்லிவிட்டு களம் காண போகிறார்கள்.
யார் கை ஓங்கி உள்ளது?
இதை வைத்துதான் நம் வாசகர்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம்.. "சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய நிலையில் யார் கை ஓங்கியிருக்கிறது" என்று ஒரு கேள்வியை கேட்டோம்.. அதற்கு "எடப்பாடி பழனிசாமி" 23.08 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. "முக ஸ்டாலின்" 55.52 சதவீதம் பேர் வாக்கு செலுத்தி உள்ளனர்.. 'கமல்ஹாசன்' 6.35 சதவீதம், "சீமான்" 6.02 சதவீதம், "மற்றவர்கள்" 1 சதவீதம் என்று ஓட்டு செலுத்தி உள்ளனர்.
எடப்பாடியார்
"வெற்றி நடை போடும் தமிழகமே" என்று பறைசாற்றி வரும் எடப்பாடியார் 23.08 சதவீதமே வாக்கை பெற்றுள்ளார்.. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுகவின் ஸ்டாலின் 55.52 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார்.. இது எதை பிரதிபலிக்கிறது? தொடர்ந்து ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால், மக்கள் ஒருவித சோர்வுக்கு உள்ளாகிவிடுவார்கள் என்று எடுத்து கொள்வதா? அல்லது ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி என்று எடுத்து கொள்வதா தெரியவில்லை.
புது முதல்வர்
10 வருடம் ஆட்சியிலும் இல்லாத நிலையில், புது தலைவரை, புது முதல்வரை மக்கள் ஏற்க தயாராகி வருகிறார்களோ என்ற சந்தேகத்தையும் இந்த கணிப்பு ஏற்படுத்துகிறது.. அல்லது திமுகவின் வியூகங்கள், அதிரடிகள், மக்களை மெல்ல மெல்ல கவர்ந்து வருகிறதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
ஸ்டாலின்
ஒன்று எடப்பாடியார், அல்லது ஸ்டாலின் என்றே இந்த தமிழகத்தின் தலைமை சார்ந்திருக்கும் என்பது உறுதியாகிறது.. மநீம, நாம் தமிழர் கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்ற போதிலும், போதுமான செல்வாக்குகளை பெற முடியவில்லை.. இதில் இன்னொன்றையும் பார்க்க வேண்டி உள்ளது.. 10 வருடமாக அரசியலில் உள்ள சீமானும், இப்போது கட்சி ஆரம்பித்த கமலும், 2 பேருமே 6 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது..
வாக்குகள்
இந்த கணிப்பு என்றில்லை, கடந்த எம்பி தேர்தலிலும் இவர்கள் 2 பேருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்கு சதவீதத்தைதான் பெற்றிருந்தனர். அதனால் இவர்களின் அரசியல் தொலைவு என்பது இன்னும் நெடுங்காலத்துக்கு உள்ளது.. மக்கள் மனசில் இடம் பெற வேண்டிய அளவுக்கு இவர்கள் தங்களை மேலும் ஆழமாக நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
மற்ற கட்சிகள்
இவர்களாவது பரவாயில்லை 6 சதவீதம் வாக்கு பெற்றிருக்கிறார்கள்.. "மற்றவர்கள்" என்ற ஆப்ஷனுக்கு 1 சதவீதம் மட்டுமே வாசகர்கள் வாக்கு செலுத்தி உள்ளனர்.. இந்த மற்றவர்கள் என்பதில், தேசிய கட்சிகளான காங்கிரசும் அடக்கம், பாஜகவும் அடக்கம்.. கம்யூனிஸ்ட்டுகளும் அடக்கம்.. ஜாதி முத்திரை குத்தப்பட்டுள்ள விசிகவும் அடக்கம், பாமகவும் அடக்கம்.. இந்த கட்சிகள் எப்படி தங்கள் எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ள போகிறார்களோ, அது அவர்களுடைய விருப்பம். ஆக, மொத்தம் திமுக, அதிமுக தவிர தமிழகத்தில் வேறு கட்சிகள் ஆட்சி என்பது இப்போதைக்கு கனவிலும் நடக்காது போல..!
நீங்க வாக்களித்து விட்டீர்களா?
நீங்க வாக்களித்து விட்டீர்களா.. வாங்க வந்து உங்களது வாக்குகளையம் எங்களது டெலிகிராம் சேனலில் செலுத்துங்கள்.. இதோ இணைப்பு