TN White Paper: தமிழ்நாடு அரசு பஸ் 1 கி.மீ ஓடினால் நஷ்டம் ரூ.59.15.. பிடிஆர் வெளியிட்ட முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஒரு கி.மீ தூரம் ஓடினால் போக்குவரத்துக் கழகத்திற்கு நஷ்டம் 59.15 ரூபாய் என்று, நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பஸ் கழகம், மின்சார வாரியம்
26 அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த நிதி சுமை காரணமாக இந்த அரசாங்கம் அதிகமாக அவர்களின் கடனுக்கு உத்தரவாதம் அளிக்க தேவை ஏற்படுகிறது. மின்சாரத் துறை, போக்குவரத்து கழகம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டும் 2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளன. தமிழக மொத்த கடனில், 10% கடன்கள் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு செலவிடப்படுகிறது.

ஒரு கி.மீ பஸ் ஓடினால் நஷ்டம் ரூ.59.15
போக்குவரத்து துறையில் இன்றைக்கு உள்ள சூழ்நிலை படி, ஒவ்வொரு கிலோ மீட்டர் ஒரு அரசு பேருந்து ஓடினால் 59.15 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தொடர்ந்து டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மேலாண்மை குறைபாடுகளும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். ஒரு ரூபாய் வருமானம் வந்தால் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டும் சுமார் 2.50 ரூபாய் வரை செலவாகிறது.

அடிப்படை மாற்றம்
பஸ் வாங்கும் செலவு, டீசல் செலவு, பழுது பார்க்கும் செலவு ஆகியவற்றை விட்டுவிடுங்கள். ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு இவ்வளவு ரூபாய் செலவாகிறது. எனவே இந்த விஷயத்தில் அடிப்படை மாற்றங்கள் தேவைப்படுகிறது.

சமூக நீதி
இந்த நிதிச்சுமைக்கு இடையேதான் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய முதல்வரால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இது அரசின் சமூக நீதி பார்வைக்கு ஒரு உதாரணம். இந்த திட்டங்களை கொண்டு வருவதற்கு முன்பே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது.

5 ஆண்டுகள்
இதற்கு காரணம் அந்த நிறுவனங்களின் மேலாண்மை மிக மோசமாக இருக்கிறது. எனவே அவற்றை திருத்துவதற்கான அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது. அடுத்த 5 ஆண்டு காலத்திற்குள், இந்த நிதி நிலை மோசடி சரி செய்யப்படும்.

மின்சார வாரிய இழப்பு
ஒரு யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தப்படும்போது, மின்சார வாரியத்துக்கு 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்ற நிலைதான் தற்போது தமிழ்நாட்டில் உள்ளது. ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்று சேர்ப்பதற்கு 20 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு அதே அளவு தண்ணீருக்கு 10.42 ரூபாய்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கிராமப்புறத்தில் இதே அளவுக்கு தண்ணீர் பெற, 8.11 ரூபாய்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தண்ணீர் கட்டணம்
அதுவும் கூட உடனடியாக வசூலிக்கப்படுவதில்லை, நிறைய பாக்கி இருக்கிறது. சென்னை மெட்ரோ வாட்டர் உற்பத்தி செய்யும் தண்ணீருக்கு செலவு அதிகம். கடல் நீரை குடிநீராக்கும் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் சென்னையில் தண்ணீர் உற்பத்தி விலையும் அதிகம். கிராமத்தில் அல்லது பிற மாநகராட்சிகளில் தண்ணீரை கொண்டு சென்று சேர்த்துவிட்டால் உள்ளாட்சி நிர்வாகங்கள் வீடுகளுக்கு சென்று இணைப்பு கொடுக்கின்றன. ஆனால், சென்னையை பொறுத்த அளவில் நேரடியாக மெட்ரோ வாட்டர் நிர்வாகம்தான் வீடுகளுக்கு தண்ணீரை கொண்டு சென்று சேர்க்கிறது. ஒரு கிலோ லிட்டருக்கு 36.58 ரூபாய் செலவாகிறது. ஆனால், அதில் 30 சதவீதம் அளவுக்குத்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சமூக நீதி
பொறுப்பான அரசாங்கம் சரியான வகையில் நிர்வாகம் செய்தால், வளர்ச்சிக்கும் உதவி வேண்டும், அதே நேரம் சமூகநீதிக்கும் உதவ வேண்டும், இதுதான் எங்கள் கொள்கை. இவ்வாறு நிதி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications