ஆள விடுங்க சாமி! கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்களாக! நடுநிலை அதிமுக வி.ஐ.பிக்கள் யார் யார்..?
சென்னை: அதிமுகவில் நீயா நானா என ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் அதிகாரப் போர் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், அக்கட்சியின் முக்கிய வி.ஐ.பி.க்கள் பலர் ஆளை விட்டால் போதும் என்கிற வகையில் நடுநிலை முடிவை எடுத்துள்ளனர்.
இந்தப் பக்கமும் இல்லை, அந்தப் பக்கமும் இல்லை என நடுநிலையான முடிவை எடுத்திருப்பதில் முதலிடத்தில் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
அவரைப் போலவே இன்னும் பல மாவட்டச் செயலாளர்கள் இருவரில் யாரை ஆதரிப்பது, எதிர்காலத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிக்க முடியாமல் நடுநிலை என்ற முடிவை நாடியுள்ளனர்.

வரலாற்று முக்கியம்
அதிமுகவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ள இந்த தருணத்தில், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவில்லை, எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவில்லை என்ற நடுநிலை ஆதரவு நிலைப்பாட்டை அக்கட்சியின் பல மாவட்டச் செயலாளர்கள் எடுத்துள்ளனர். மதுரை மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, இதுவரை தனது ஆதரவு யாருக்கு என்பதை அவர் தெரிவிக்க முன்வரவில்லை.

செல்லூர் ராஜூ
எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு நடத்தும் போதும் சரி, ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சு நடத்திய போதும் சரி தாம் ஒரு நடுநிலைவாதி என்பதை போல் காட்டிக்கொண்டார் செல்லூர் ராஜூ. இதேபோல் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜூம் நடுநிலை என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறார். இவர்களைப் போலவே முன்னாள் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களுமான எம்.சி.சம்பத், திருவாரூர் காமராஜ் ஆகிய இருவரும் நடுநிலை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.

நடுநிலை முடிவு
வெளிப்படையாக தாங்கள் யார் பக்கம் நிற்போம் என்பதை அவர் தெரிவிக்க முன்வரவில்லை. இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமியும் அவரது மனைவியும் மகளிர் அணி மாநில நிர்வாகியுமான கீர்த்திகா முனியசாமி ஆகியோரும் நடுநிலை என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். ஓபிஎஸ்சும் முக்கியம், இபிஎஸ் சும் முக்கியம் இதில் ஒருவர் பக்கம் மட்டும் நிற்பது முறையாக இருக்காது எனக் கருதுகிறார்கள். கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜேந்திரனும் தமது ஆதரவு யாருக்கும் என்பதை தெரிவிக்க விரும்பவில்லை. நடுநிலையாக இருப்பது என முடிவு செய்திருக்கிறார்.

யாருக்கு ஆதரவு
இவர்களை போல் இன்னும் பல முக்கிய மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் தடுமாறி வருகின்றனர். இதற்கு காரணம் கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் இருவர் மூலமும் பயனடைந்ததே. நடுநிலை என்ற முடிவுடன் இருக்கக்கூடிய சுமார் 10 மாவட்டச் செயலாளர்களை வளைக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரண்டு தரப்புமே காய் நகர்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications