ஐடி நிறுவன அதிகாரி டூ திமுக! கட்சியில் தேடி வந்த மாநிலப் பொறுப்பு! பூரிப்பில் பூர்ண சங்கீதா!
சென்னை: ஐடி நிறுவனத்தில் உயர் பொறுப்புகளில் இருந்த பூர்ண சங்கீதாவுக்கு திமுக மாணவரணியில் மாநிலப் பொறுப்பு தேடி வந்துள்ளது.
கட்சிக்காக களப்பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகம் இருப்பதாலும், அவரது பரம்பரையே திமுக குடும்பம் என்பதாலும் தலைமை இந்த வாய்ப்பை கொடுத்துள்ளது.
திமுகவில் இணைய வேண்டும் என்பதற்காக ஐடி நிறுவன பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர் பூர்ண சங்கீதா என்பது கூடுதல் தகவலாகும்.

திமுக மாணவரணி
திமுக மாணவரணியில் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள 2 பெண்களில் பூர்ண சங்கீதாவும் ஒருவர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த இவர், கருணாநிதியால் சிறைப்பறவை என்று செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த திமுகவின் மூத்த முன்னோடி எஸ்.எஸ்.தென்னரசுவின் பேத்தியாவார். இதேபோல் பூர்ண சங்கீதாவின் தந்தை சின்னமுத்து சிங்கம்புணரி நகர திமுக செயலாளராக இருந்தவர் என்பது கூடுதல் தகவல்.

திமுக குடும்பம்
இப்படி திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த பூர்ண சங்கீதா சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் முன்னணி ஐடி நிறுவனங்களில் மனிதவள பிரிவு அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். சிறுவயது முதலே திராவிட இயக்க சித்தாந்தங்கள் மீது பற்றுக் கொண்ட அவர் நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் கூட திமுக அனுதாபியாக சமூக வலைதளங்களில் வலம் வந்திருக்கிறார். இந்நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நேரடி அரசியலுக்கு வந்த இவர் திமுகவில் மாநில சுற்றுச் சூழல் அணி துணைச் செயலாளரானார்.

களப்பணி
இப்போது கட்சியில் வழங்கப்பட்ட புரோமோஷனாக திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. ஐடி நிறுவன முன்னாள் ஊழியர் என்ற அடிப்படையில் திமுக தகவல் தொழில் நுட்ப அணியில் இவருக்கு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களப்பணி மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக மாணவரணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரது தாத்தா எஸ்.எஸ்.தென்னரசு சிறுகதை மன்னன் என பெயரெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புது முகங்களுக்கு வாய்ப்பு
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இந்த முறை பல புதுகங்களுக்கு ஒவ்வொரு அணியிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications