39 நாளில் டேவிட்சன் மாற்றம்! புதிய டிஜிபியான சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்! சந்தீப் மிட்டல் யார்?
சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த துறையின் டிஜிபியாக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் 39 நாட்களில் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்காக நடத்தை விதிகள் அமலில் உள்ளன. பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் சந்தீப் ராய் ரத்தோடை புதிய டிஜிபியாக தேர்தல் ஆணையம் இரவோடு இரவாக நியமித்தது. இதைத் தொடர்ந்து அடுத்த அதிரடியாக தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றியது.
அவருக்கு பதிலாக சாய்குமார் ஐஏஎஸ்ஸை புதிய தலைமைச் செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக செயல்பட்டு வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதிதான் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆயுதப்படையில் இருந்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்பட்டார். அதன்படி அவர் நியமிக்கப்பட்டு 39 நாட்களில் மாற்றப்பட்டு, புதிய லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதிலும் இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என தேர்தல் ஆணையச் செயலாலர் லதா திரிபாதி உத்தரவிட்டுள்ளார். புதிய லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டல் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதாவது கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபியாக இருந்தவர் 2024 ஜூலை மாதம் சைபர் கிரைம் ஏடிஜிபியாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சைபர் கிரைம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். இவர் 1995 பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி. சைபர் செக்யூரிட்டியில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றவர்.
அதிமுக ஆட்சியில் டெல்லி பணியில் இருந்து தமிழகத்திற்கு திரும்பினார். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்பேரில் இவர் தமிழக கேடருக்கு வந்ததாக கூறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் சந்தீப் மிட்டல்!












Click it and Unblock the Notifications