ஜெ. உடலுக்கு எம்பார்மிங் செய்தவர் சுதா சேஷையன்!
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பார்மிங் எனும் பதப்படுத்துதல் முறையை செய்தவர் தற்போது எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்ற சுதா சேஷையன்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். டிசம்பர் 6ஆம் தேதி அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடலை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. காரணம், பொலிவுடன் இருந்தது ஜெயலலிதாவின் முகம். இதற்குக் காரணம் அவரது கன்னத்தில் காணப்பட்ட 4 புள்ளிகள்தானாம். எம்பாமிங் முறையில் அவரது உடல் பதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சென்னையில் அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் உள்ளிட்டோர் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி பேட்டியளித்தனர். அப்போது ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டதா என்று நிருபர்கள் ஒரு கேள்வியை எழுப்பினர்.
ஜெயலலிதா உயிரிழந்தது உறுதி
அப்போது, சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநர் சுதா சேஷையன் அதற்கு பதிலளிப்பார் என அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுதா சேஷையனே செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் டிசம்பர் 5ம் தேதி இரவு 11.35 மணியளவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாகவும், அவரின் உடலை பதப்படுத்துவதற்கான குழுவை அனுப்பும்படியும் இருவரும் கூறினர். அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றேன்.
தயார் நிலையில் இருந்தோம்
பொதுவாக எங்களது குழுவினர் எப்போதுமே இதுபோன்ற அழைப்புகளை எதிர்பார்த்து தயாராக இருப்பது வழக்கம் என்பதால், நாங்கள் அப்பல்லோவுக்கு, விரைந்து சென்றுவிட்டோம். மருத்துவமனையில்தான் உடலை பதப்படுத்துவதற்கான பார்மலின் திரவத்தைக் கலந்து தயாரித்தோம். அதன் பின்னர் பதப்படுத்துவதற்கான திரவம் ரத்தக் குழாய்களில் நிரப்பப்பட்டது. இதற்காக, ஜெயலலிதா உடலின் வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிஷங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது.
துளைகள் ஏதும் இல்லை
பதப்படுத்துவதற்கான செய்முறைக்கு முன்பாக உடலை ஆராய்ந்தேன். ஜெயலலிதா உடலில் திசுக்கள் எதுவும் சேதமடையவில்லை. அவரது உதடுகளிலும், மூக்கில் மட்டுமே ஓரிரு திரவ துளிகள் வெளியேறின. நீண்ட நாள் சிகிச்சை, படுக்கையில் இருந்ததால், அவரது உடலில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. அதுதான் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது எடுத்த போட்டோவில் காணப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியானது போன்று அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை.
சுவாசக் காற்று
ஜெயலலிதாவை நீண்ட நாட்கள் பார்த்தவர்களால் ஒரு வித்தியாசத்தை உணர முடியும். அவரது உதடு தடித்து காணப்பட்டது. டிரக்யாஸ்டமி எனப்படும் கழுத்தில் துளையிட்டு சுவாச காற்று கொடுத்து, சிகிச்சை பெற்றவர்களின் உதடுகள் தடித்து காணப்படும் என்பதால்தான் அவ்வாறு அவரது உதடுகள் தடித்து காணப்பட்டன.
நடைமுறைகள்
முக்கிய நபர்கள் இறந்து, அவர்களது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும்போது உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், அஞ்சலி செலுத்த வருவோருக்கு துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம். எனவேதான் ஜெயலலிதாவுக்கும் உடல் பதப்படுத்தப்பட்டது. 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி அதிகாலை அவரது உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லும் நேரத்திற்குள் இந்த நடைமுறைகள் நடந்து முடிந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதே டீம் தான்
அப்போது நிருபர் ஒருவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் போன்ற வி.ஐ.பிகளின் உடல் சாதாரண முறையில்தானே அடக்கம் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். ஆனால் இதை மறுத்த சுதா சேஷையன், எம்.ஜி.ஆர் உடலுக்கும் பதப்படுத்தல் நடந்தது என்றார். மேலும், உடலும் இதே வகையில்தான் பதப்படுத்தப்பட்டது என்றார். சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் நிபுணர்கள்தான் அதை அப்போதும் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
துணைவேந்தர் பதவி
ஜெயலலிதாவுக்கு எம்பார்மிங் செய்த சுதா சேஷையனுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.