செதில் செதிலா நொறுங்குதே.. யாரந்த "2 புள்ளிகள்".. மேலிடம் பறக்கும் புகார்.. ஹீட்டாகும் திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி யாருக்கு கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுகிறது
சென்னை: எம்பி தேர்தலுக்கான நேரடி பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்காவிட்டாலும் அதுகுறித்த செய்திகள் இணையத்தை வட்டமடித்த வண்ணம் உள்ளன.. அந்தவகையில், திமுக கூட்டணிக்குள்ளேயே லேசான புகைச்சல் ஒன்று கிளம்பி உள்ளதாம்.. என்ன காரணம்? யார் காரணம்? இதை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் உற்றுநோக்கி வருகின்றன.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.
திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது..
பாஜக மாநில நிர்வாகியை தட்டித் தூக்கிய திமுக.. தேமுதிக கூடாரமே காலி.. மொத்தமா கிளம்பிட்டாங்களே!
பஞ்ச் டயலாக்
அந்தவகையில் திமுக கூட்டணி பலத்துடன் உள்ளது என்றாலும், வலுவான கட்சிகளுடன் அமைத்து, எம்பி தேர்தலை சந்திப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்தார்.. எனவே, வேறு சில கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், இந்த முறை, திமுக கூட்டணியில் அதிக சீட்களை கேட்டு பெறுவோம், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பிடித்தால் மட்டுமே திமுக வெற்றி பெறும் என்று இப்போதே பகீரை கிளப்பி பேட்டி தந்து கொண்டிருக்கிறார் கேஎஸ் அழகிரி..
கர்ஜனை
இன்னொருபக்கம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ரேட்டை மறைமுகமாக அதிகப்படுத்தி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு எத்தனை சீட்களை திமுக ஒதுக்கீடு செய்யும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.. மதிமுகவை பொறுத்தவரை, திமுகவுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. கடந்த முறை தேர்தலின்போது பாஜகவுக்கு எதிரான வைகோவின் "கர்ஜனை முழக்கம்", திமுக கூட்டணி வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததை மறுக்க முடியாது..
கர்ஜனை
கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 1+1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழழும் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பி, அதன் வெற்றியையும் திமுக கூட்டணி அறுவடை செய்திருந்தது.. இந்த முறை எம்பி தேர்தலில் துரை வைகோ களமிறங்க போவதாக சொல்லப்படுகிறது.. சமீபகாலமாகவே துரை வையாபுரியின் அரசியல் வேகமெடுத்து வருகிறது.. நிறைய அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.. மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.. அதுவும், பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில் துரைவைகோ தீவிரமும் காட்டி வருகிறார்..
எங்கே வைகோ
எனினும் 3 மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் வட்டமடித்தது.. கோவில்பட்டி தொகுதிக்கு, துரை வையாபுரி குறி வைத்து வருவதாக வருவதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும்பகுதி கோவில்பட்டி தொகுதிக்கே செலவிடப்படுவதாகவும்கூட சொல்லப்பட்டது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது, அதாவது 2016-ல் தேர்தலில் கோவில்பட்டியைதான் வைகோ தேர்ந்தெடுத்தார்.. ஆனால் திடீரென விலகிக்கொண்டு, வேறு நபரை நிறுத்தி போட்டியிட செய்தார்.. அதனால் இந்த முறை, மகனுக்கு அந்த தொகுதியை வழங்க யோசித்து வருவதாகவும் செய்திகளும் கசிந்தன. ஆனால், அதற்கு பிறகு அதுகுறித்து பெரிதாக எந்த தகவலும் வெளியாகவில்லை..
ஸ்டன் சிவகாசி
இப்படிப்பட்ட சூழலில், சிவகாசியில் மதிமுக நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது.. இந்த வட்டத்தில் துரை வைகோ கலந்து கொண்டு பேசியுள்ளார்.. அப்போது, வரும் எம்பி தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு தர் வேண்டும்.. வைகோ எம்பியாக இருந்தபோது, விருதுநகருக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதுபோலவே, தானும் செயல்பட வாய்ப்பு தர வேண்டும் என்ற ரீதீயில் பேசியிருந்தார்.. இதை கேள்விப்பட்டுதான் காங்கிரஸ் அதிர்ந்து போய்விட்டதாம்.. அதிலும் மாணிக்கம் தாகூர் டீம் இதை எதிர்பார்க்கவே இல்லையாம்..
கிசுகிசுக்கள்
மாணிக்கம் தாகூரை பொறுத்தவரை கட்சியில் சீனியர்.. விருதுநகர் தொகுதி எம்பியான மாணிக்கம் தாகூர், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்.. நம்பகமானவர்.. திமுகவுக்காக குரல் கொடுக்கும் கூட்டணி எம்பிக்களிலேயே முதன்மையானவரும் கூட.. இப்படி இருக்கும்போது, திடீரென விருதுநகரை, துரை வையாபுரி கேட்டுள்ளதுதான் குழப்பமாகி உள்ளது.. அதனால், இந்த விஷயத்தை ராகுல் காந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளாராம்.. தேர்தலுக்கு இன்னும் டைம் உள்ள நிலையில், இப்பவே விவகாரங்கள் முளைக்க துவங்கிவிட்டன.. ஒருவேளை விருதுநகர் தொகுதியை கூட்டணியில் உள்ள 2 தரப்புமே கேட்க முனைந்தால், திமுக மேலிடம் என்ன முடிவு செய்யும்? தெரியவில்லை.. பார்ப்போம்..!!