தமிழகத்தில் எந்த கூட்டணி அதிக தொகுதிகளை வெல்லும்.. உளவுத்துறையின் பரபர அறிக்கை.. உண்மை என்ன?
சென்னை: தமிழக தேர்தல் கள நிலவரம், தொடர்பாக மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள தகவல் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், மத்திய மாநில உளவுத் துறை அமைப்புகளை, அந்தந்த அரசுகள், தேர்தல் வெற்றி தொடர்பான அறிக்கைகளை தயார் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுவது உண்டு.
அந்த வகையில் தற்போது, தமிழகத்தில் எந்த மாதிரியான காலச் சூழ்நிலை நிலவுகிறது என்று மத்திய உளவுத்துறை தமிழக பிரிவிடம் அறிக்கை கேட்டதாக கூறப்படுகிறது.
வாக்கு கேட்டு பள்ளிவாசல் சென்ற அமைச்சர், அதிமுக எம்எல்ஏவுக்கு கடும் எதிர்ப்பு.. மதுரையில் பரபரப்பு
கூட்டணிகள்
தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், திமுக , கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மற்றொரு கூட்டணியாகவும், போட்டியிடுகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிக தொகுதிகளில் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கும் மேல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 25 தொகுதிகளுக்கும், மேலாக திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், தேர்தல் நெருங்கும் போது இந்த எண்ணிக்கையில் ஏற்றமோ அல்லது இறக்கமோ இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாக்குகள் சிதறும்
திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு இந்தமுறை ஆதரவு இருந்தாலும், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால், எதிர்க்கட்சிகளுக்கு செல்லக்கூடிய வாக்குகள் சிதறும் என்பது அந்த அணிக்கு பலவீனம் என்று உளவுத்துறை அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது .
சும்மா சார்
அதிமுக கூட்டணியை பொறுத்தளவில் அதிகபட்சம் 10 தொகுதிகளில் தான் வெல்ல முடியும் என்று உளவுத்துறை அறிக்கை கூறுவதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உளவுத்துறை, அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, தாங்கள் அவ்வாறு எந்த ஒரு அறிக்கையும் அனுப்பவில்லை என்றும், இது தொடர்பாக சில குறிப்பிட்ட கட்சியினர்தான் வாட்ஸ் அப்பில் பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் கூறுகிறார்கள். எது எப்படியோ மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது உண்மை தெரிந்துவிடத்தானே போகிறது.