யார் ஆட்சி டாப்? எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? - லயோலா முன்னாள் மாணவர்கள் சர்வேயில் ஆச்சர்ய முடிவு!
லயோலா முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், ஆச்சர்யப்படும் வகையிலான முடிவுகள் வந்துள்ளன.
சென்னை : லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதற்கு முந்தைய எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 53 சதவீதமும் தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு 42 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினா? யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்பது குறித்து லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில், சிறந்த ஆட்சியை கொடுத்தது யார் என்ற கேள்விக்கு மக்கள் 53% பேர் எடப்பாடி பழனிசாமி என்றும், மு.க.ஸ்டாலின் என 42% பேரும் பதில் கூறியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016 டிசம்பரில் மறைந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிக் குழப்பங்களைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பல்வேறு குழப்பங்களுக்கிடையே ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும், சுமார் நான்கரை ஆண்டுகாலம் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலும், அதிமுக ஆட்சியில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களைப் பிடித்து வலிமையான எதிர்க்கட்சியாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டது. இதுவே, எடப்பாடி பழனிசாமியின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

இடைத்தேர்தல்
2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வரானார். திமுக ஆட்சிக்கு வந்து தற்போது 20 மாதங்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவு, திமுக ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண்ணாகப் பார்க்கப்படுகிறது.

யார் ஆட்சி டாப்?
இந்நிலையில், இதுதொடர்பாக லயோலோ கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கள ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்பது குறித்தும் கள ஆய்வு நடத்தியுள்ளனர். இதில், ஆச்சர்யப்படும் வகையிலான முடிவுகள் வந்துள்ளன. இந்த 20 மாத கால ஸ்டாலின் ஆட்சியை விட எடப்பாடி பழனிசாமி ஆட்சியே சிறப்பாக இருந்ததாக வாக்களித்துள்ளனர்.

எடப்பாடி ஆட்சி
லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் நடத்திய இந்த கள ஆய்வில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு 53 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு 42 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தான் சிறப்பானது என்று சொல்கிறது, லயோலா முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications