தமிழர்களின் தூண்களை இடித்தீர்களே! ராஜபக்சேக்களின் அடிமடியில் கை வைத்த சிங்களர்கள்.. யார் இந்த டான்?
சென்னை: காலமே.. காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய் என்று பாடல் பிகில் படத்தில் வரும்.. அந்த பாடல் தற்போது சரியாக யாருக்கும் பொருந்தும் என்றால் அது ராஜபக்சே குடும்பத்திற்குதான். ஆம்.. காலம் அவர்கள் எதிர்பார்க்காத ஒரு இடத்திற்கு கொண்டு போய் சென்றுள்ளது.
Recommended Video
பேரினவாதம் என்று வந்துவிட்டால்.. இலங்கையின் பெரும்பாலான கட்சிகள் தமிழர்களுக்கு விரோதமானவர்கள்தான். அதிலும் ராஜபக்சே குடும்பத்தின் இலங்கை பொதுஜன முன்னணி என்பது தமிழர்களுக்கு விரோதமான, சிங்கள பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் கட்சி ஆகும்.
இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த போது.. மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் தமிழர்களுக்கு எதிராக மிக மோசமான தாக்குதல்களை, இன வெறுப்பை கட்டவிழ்த்துவிட்டதை யாரும் மறக்க மாட்டார்கள்.

போர் உச்சம்
போர் உச்சத்தில் இருந்த 2009 காலகட்டத்தில் தமிழர்களின் நினைவிடங்கள், தூண்கள், சமாதிகள் எல்லாம் தேடி தேடி அழிக்கப்பட்டது. ஒருவரின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்றால்.. அவர்களின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்பார்கள். அதைத்தான் ராஜபக்சே குடும்பமும் செய்தது. இலங்கையில் இருந்த தமிழர்களின் நினைவு தூண்கள் பலவற்றை ராஜபக்சே ஆட்சி காலத்தில் அழித்தனர்.

ஜே. ஆர் ஆட்சி
அதற்கு முன்பாகவே அதிபர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனே (இவர் யு.என்.பி முன்னணியை சேர்ந்தவர்) ஆட்சியில் 1981ல் இலங்கையில் மிகப்பெரிய தமிழர்களின் நூலகமான யாழ்ப்பான நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இதில் தொடங்கிய மோதல்தான் மிகப்பெரிய உள்நாட்டு போராக வெடித்தது. அதன்பின் 2000ம் ஆண்டில் போர் உச்சம் தொட்ட பின் 9 ஆண்டுகள் இலங்கையில் இருந்த தமிழர்களின் அடையாளங்கள், நினைவு தூண்கள் பல அகற்றப்பட்டன.

நீக்கம்
மஹிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போதுதான் இது உச்சம் தொட்டது. அதன்பின் போர் முடிந்த பின்பும் கூட விடுதலை புலிகள் அமைப்பிற்காக ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த நினைவு தூண்கள், சின்னங்களை அழைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் எங்கும் தமிழ் போராளிகளை வழிபடவோ, கொண்டாடவோ, அல்லது நினைவு சின்னம் எழுப்பி நினைவு கூறவோ ராஜபக்சே குடும்பம் அனுமதிக்கவில்லை.

விளைவு
அப்படிப்பட்ட ராஜபக்சே குடும்பத்தைதான் காலம் இன்று மோசமான ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறது. ஆம்.. பல தூண்களை.. நினைவு சின்னங்களை இடித்த அதே ராஜபட்ச குடும்பத்தின் காட் பாதரான டான் ஆல்வின் ராஜபக்சேவின் நினைவு தூண் இடிக்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் ராஜபக்சே ஆட்சிக்கு விதை போட்டவர் டான் ஆல்வின் ராஜபக்சேதான். இவர் முன்பு அமைச்சராகவும், சபாநாயகராவும் இருந்துள்ளது. இலங்கை சுதந்திர கட்சியை தொடங்கியவர்களில் இவரும் ஒருவர். இப்போது இதன் தலைவராக சிறிசேனா இருக்கிறார்.

நீக்கம்
டான் ஆல்வின்தான் மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே இருவரின் அப்பா. அங்கு இருந்த அமைச்சர்கள் பலரின் தாத்தா இவர்தான். இந்த நிலையில்தான் அம்பாந்தோட்டையில் டான் அல்வின் ராஜபக்சே நினைவுத்தூபி நேற்று அழிக்கப்பட்டது. இரண்டு கோளம் போன்ற அமைப்பு கொண்டது ஆகும் இந்த தூபி. ஒவ்வொரு முறையும் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே இங்கே செல்வது வழக்கம்.

செண்டிமெண்ட்
சென்டிமென்ட்டாக இவர்களுக்கு இந்த தூபி மிகவும் விருப்பமானது ஆகும். அப்படிப்பட்ட தூபியைதான் அங்கு சிங்களர்கள் இடித்துள்ளனர். தமிழர்களின் நினைவு சின்னங்களை இடித்தவர்கள் தங்கள் அப்பாவின் நினைவு சின்னத்தை இழந்து நிற்கிறார்கள்.. அதுவும் சிங்களரிடத்தில். ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்று வரலாற்றை மாற்ற முயன்ற பயில்வான்கள்.. தற்போது தங்கள் வரலாற்றையே இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications